Published : 30 Aug 2021 02:01 PM
Last Updated : 30 Aug 2021 02:01 PM

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.477 கோடி மதிப்பில் முடிவுற்ற பணிகள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.477.42 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற பணிகளைத் தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதுகுறித்துத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

''தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (30.8.2021) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் 477 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் வேலூர் மாவட்டம், வேலூர் மாநகராட்சிப் பகுதிகளுக்கு 234 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் அபிவிருத்தித் திட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி, தாத்தையங்கார்பேட்டை, துறையூர் மற்றும் உப்பிலியாபுரம் ஒன்றியங்களுக்குட்பட்ட 293 குடியிருப்புகளுக்கு 140 கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர்த் திட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரைப் பேரூராட்சி மற்றும் ஊத்தங்கரை ஒன்றியத்திற்குட்பட்ட 50 குடியிருப்புகளுக்கு 28 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை முதல்வர் திறந்து வைத்தார்.

நகராட்சி நிர்வாகத்தின் சார்பில், மதுரை மாநகராட்சியின் புதுமண்டபத்திலிருந்து 7 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குன்னத்தூர் சத்திரத்திற்கு மாற்றி அமைக்கப்பட்ட கடைகள், திருமலை நாயக்கர் மஹாலில் 3 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கிரானைட் இருக்கைகள், புல்வெளிப் பரப்பு, கருங்கல் நடைபாதை உள்ளிட்ட வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட சுற்றுப்புறப் பூங்கா, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் புராதன வழித்தடத்தில் 14 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள எல்.இ.டி. விளக்குகளுடன் கூடிய அலங்கார விளக்குகள், மாநகராட்சியின் பழைய நகரப் பகுதிகளில் 30 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மாற்றியமைக்கப்பட்ட எல்.இ.டி தெரு விளக்குகள், சேலம் மாநகராட்சி, கோட்டை பழைய மார்க்கெட் சாலையில் 5 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள வணிக வளாகம் மற்றும் உடற்பயிற்சிக்கூடம், 8 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீர்மிகு சாலையாக மாற்றியமைக்கப்பட்ட சீதாராமன் சாலை, 5 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட கிருஷ்ணா ராஜேந்திர சத்திரம் என மொத்தம் 477 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான முடிவுற்ற பணிகளைத் தமிழக முதல்வர் இன்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் வி.தட்சிணாமூர்த்தி, நகராட்சி நிர்வாக இயக்குநர் பா.பொன்னையா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்''.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x