Published : 30 Aug 2021 10:56 AM
Last Updated : 30 Aug 2021 10:56 AM

வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானம்: முதல்வர் ஸ்டாலினுக்கு வைகோ பாராட்டு 

சென்னை

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலினுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

''மத்திய பாஜக அரசு 2020 செப்டம்பரில் நாடாளுமன்றத்தில், மக்களாட்சி மாண்புகளைக் காலில் போட்டு மிதித்துவிட்டு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராடி வருகின்றனர். டெல்லியில் கடந்த 2020 நவம்பர் 26 முதல் இன்றைய நாள் வரையில் 277 நாட்களாக பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி அறவழிப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஐநூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டக் களத்தில் உயிர் இழந்திருக்கிறார்கள்.

இந்திய விவசாயிகளின் போராட்டம் உலக அளவில் கவனத்தைப் பெற்று இருக்கிறது. ஆனால் மோடி அரசு விவசாயிகளின் கொந்தளிப்பை அலட்சியப்படுத்தி வருகிறது.

விவசாயிகளுக்கு (அதிகாரம் அளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் ஒப்பந்தச் சட்டம், வேளாண் உற்பத்தி, வர்த்தகம் மற்றும் வணிக மேம்பாட்டுச் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம், அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் ஆகிய மூன்று வேளாண் சட்டங்களும் இந்தியாவில் வேளாண் தொழிலையே கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரை வார்த்துக் கொடுக்க வழி வகை செய்கிறது.

வேளாண்துறை அரசின் கட்டுப்பாட்டிலிருந்து தனியார் பெரு நிறுவனங்களிடம் போய்விடும் அபாயம் உருவாகி உள்ளது. வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதையும் இச்சட்டங்கள் உறுதிப்படுத்தவில்லை. வேளாண் விளைபொருள் சந்தை முழுக்க முழுக்க பன்னாட்டு உள்நாட்டுப் பெரு நிறுவனங்களின் பிடியில் சென்றுவிடும்.

மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறித்து ஆதிக்கம் செலுத்தும் வகையில் மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் பகைச் சட்டங்களும் கூட்டாட்சிக் கோட்பாட்டுக்கு எதிரானது ஆகும்.

இந்நிலையில்தான் தமிழக சட்டப்பேரவையில் ஆகஸ்டு 28ஆம் நாள், மத்திய அரசின் மூன்று வேளாண் பகைச் சட்டங்களை ரத்து செய்யக் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார். அவருக்கு என் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதில் வெற்றி கிட்டும் வரை போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளின் பக்கம் திமுக அரசு நிற்கும் என்பதற்கு சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மானம் சான்றாக இருக்கிறது.

இதனிடையே ஹரியாணாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தொகுதியான கர்னலில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது ஹரியாணா காவல்துறை கட்டவிழ்த்துவிட்ட கொடூரத் தாக்குதலால் விவசாயிகள் ரத்தம் சிந்தியிருக்கிறார்கள். அடக்குமுறை மூலம் விவசாயிகளை வீழ்த்திவிடலாம் என்று பகல் கனவு காணுகிற ஹரியாணா அரசுக்கும், அலட்சியப்படுத்துதல் மூலம் இத்தகைய அறப்போராட்டங்களை நீர்த்துப்போகச் செய்துவிடலாம் என்று நினைக்கின்ற நரேந்திர மோடி அரசுக்கும் கடும் கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்''.

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x