Published : 09 Feb 2016 07:48 AM
Last Updated : 09 Feb 2016 07:48 AM
திமுக தலைவர் கருணாநிதி, தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோரை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று சந்தித்து தனது மகன் திருமண அழைப்பிதழை வழங்கினார்.
தமிழிசை சவுந்தரராஜனின் மகன் டாக்டர் சுகநாதனுக்கும், கோவை தொழிலதிபர் டி.செல்வராஜின் மகள் டாக்டர் திவ்யாவுக்கும் வரும் 17-ம் தேதி சென்னையில் திருமணம் நடை பெறவுள்ளது. அன்று மாலை 6.30 மணிக்கு திருமண வரவேற்பு நடக்கவுள்ளது.
திருமண விழாவில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் ராம்லால் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் இந்த திருமண விழாவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் தமிழிசை நேரில் அழைப்பு விடுத்து வருகிறார்.
நேற்று மாலை 6 மணிக்கு திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்த தமிழிசை, தனது மகன் திருமண அழைப்பிதழை வழங்கினார். முன்னதாக மாலை 3.30 மணிக்கு தமிழக காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த தமிழிசை அங்கு தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினார். அப்போது காங்கிரஸ் மாநில ஊடகப் பிரிவுத் தலைவர் ஆ.கோபண்ணா உடனிருந்தார்.
திமுக - தேமுதிக - பாஜக கூட்டணி ஏற்பட முயற்சிக்கப் போவதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ள நிலையில் கருணாநிதியை தமிழிசை சந்தித்துள்ளார். திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக சென்றாலும் இருவரும் நடப்பு அரசியல் சூழல் குறித்து பேசியதாகக் கூறப்படுகிறது.
தமிழக பாஜக தலைவர் மகனின் திருமணம், காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான காமராஜர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT