Published : 28 Aug 2021 03:39 PM
Last Updated : 28 Aug 2021 03:39 PM

10 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

பிரதிநிதித்துவப் படம்.

சென்னை

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று (ஆக.28) வெளியிட்ட அறிவிப்பு:

"வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக இன்று நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு (சென்டி மீட்டரில்):

திருப்பத்தூர் 7, சோலையாறு (கோவை) 6, மரக்காணம் (விழுப்புரம்), திருப்போரூர் (செங்கல்பட்டு), விழுப்புரம், பரங்கிப்பேட்டை (கடலூர்) தலா 5, சின்னக்கல்லாறு (கோவை), திருவாலங்காடு (திருவள்ளூர்), திருவள்ளூர், அவலாஞ்சி (நீலகிரி), வானூர் (விழுப்புரம்), பெரம்பூர் (சென்னை), போளூர் (திருவண்ணாமலை), திருத்தணி (திருவள்ளூர்), காஞ்சிபுரம், ஆம்பூர் (திருப்பத்தூர்) தலா 4, கிருஷ்ணகிரி, அம்பத்தூர் (திருவள்ளூர்), வால்பாறை (கோவை), புழல் (திருவள்ளூர்), விரிஞ்சிபுரம் (வேலூர்), வந்தவாசி (திருவண்ணாமலை) தலா 3, ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), புவனகிரி (கடலூர்), பென்னாகரம் (தருமபுரி) தலா 2, சென்னை விமான நிலையம், சென்னை நுங்கம்பாக்கம் தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

வங்கக் கடல் பகுதிகள்:

28.08.2021 முதல் 29.08.2021 வரை: குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானதன் காரணமாக, மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

28.08.2021 முதல் 29.08.2021 வரை: மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35-45 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அரபிக் கடல் பகுதிகள்:

28.08.2021 முதல் 30.08.2021 வரை: கேரளா மற்றும் கர்நாடக கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

28.08.2021 முதல் 30.08.2021 வரை: தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்".

இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x