Published : 08 Feb 2016 08:44 AM
Last Updated : 08 Feb 2016 08:44 AM
தமிழகத்தில் ஒரே மாதத்தில் டெங்கு காய்ச்சலால் 438 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகம் கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலின் பிடியில் சிக்கித் தவித்தது. ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கிய டெங்கு காய்ச்சல் ஏடிஸ் கொசுக்களின் மூலமாக வேகமாக பரவத் தொடங்கியது. வரலாறு காணாத வடகிழக்கு பருவமழையும் பெய்ததால் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு ஆண்டு இறுதி வரை நீடித்தது. தமிழகம் முழுவதும் 4,484 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக் கப்பட்டனர். சுகாதாரத்துறை அதிகாரிகள் மருத்துவ முகாம்கள், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்குவது போன்ற பல்வேறு தடுப்பு நடவடிக்கை களால் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டு தமிழகத் தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் தமிழகம் முழு வதும் 438 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவில் 226 பேரும், மகாராஷ்டிராவில் 118 பேரும், புதுச்சேரியில் 83 பேரும், கர்நாடகாவில் 58 பேரும், குஜராத் தில் 32 பேரும், ஆந்திராவில் 29 பேரும், சத்திஸ்கரில் 2 பேர் என நாடு முழுவதும் ஒரே மாதத்தில் 1,055 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
கேரளாவில் மட்டும் டெங்கு காய்ச்சலுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தியா வில் அதிகபட்சமாக தமிழகத்தில் 438 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தென்மாவட்டங்களில் பாதிப்பு
இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. பரிசோதனை மையங்கள் அதிகமாக இருப்பதால், டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் இருப்பவர்கள் அனைவரையும் பரிசோதனை செய்கிறோம். மேலும் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் குறித்த உண்மையான புள்ளி விவரத்தை காட்டுகிறோம். அதனால் தான் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் போல் தெரிகிறது. திருப்பூர் மற்றும் தென்மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் கொஞ்சம் இருக்கிறது. அந்த பகுதிகளில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT