Published : 28 Aug 2021 03:16 AM
Last Updated : 28 Aug 2021 03:16 AM

வேலூர் மாவட்டத்துக்கு வந்த - நெதர்லாந்து பெண்ணின் விசா காலாவதி: நாடு திரும்ப ஆட்சியரிடம் உதவி

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று உதவி கோரி வந்த நெதர்லாந்து பெண்ணின் விவரங்களை சேகரித்த காவல் துறை அதிகாரி.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் சமூக சேவைக்காக வந்து விசா காலம் முடிந்து தங்கியுள்ள நெதர்லாந்து பெண், நாடு திரும்ப உதவி செய்யக் கோரி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட்டார்.

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் ஹென்னா மேரி (44). இவர், கடந்த 2019-ம் ஆண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்வதற்காக வேலூர் வந்துள்ளார். தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த அவர்ஊரடங்கு காரணமாக மீண்டும் நெதர்லாந்து திரும்ப முடிய வில்லை. கையில் இருந்த பணமும் கரைந்த நிலையில் அவரது வங்கிக் கணக்கும் முடங்கியது.

பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட ஹென்னா மேரி, தனியார் ஹோட்டலில் இருந்து வெளியேறி காட்பாடி காந்திநகர் ஜெகநாதன் நகரில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருக்க சிலர் உதவியுள்ளனர். ஆனால், தொடர்ந்து அங்கும் தங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் நெதர்லாந்து திரும்ப உதவி செய்யுமாறு அதிமுக பிரமுகர் பாபு என்பவர் உதவியுடன் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முறையிட்டார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அதிகாரி கள் கூட்டத்தில் இருந்ததால் ஆட்சியர் அலுவலக மேலாளர் பாலாஜி விசாரித்தார். பின்னர், அவரை சென்னை மற்றும் டெல்லியில் உள்ள நெதர்லாந்து நாட்டின் தூதரக அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும் அறிவுரை களை வழங்கி அனுப்பினார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘நெதர் லாந்து பெண்மணியின் விசா காலம் முடிந்து பல மாதங்கள் ஆகிறது. அவர் தற்போது சட்ட விரோதமாக தங்கியுள்ளார். இந்தியாவில் அவர் தங்கியிருந்தபோது முறையான பணப்பரிமாற்றம் இல்லை என்பதால் அவரது வங்கிக் கணக்கு முடங்கி இருக்கலாம்.

எனவே, அவர் நாடு திரும்ப நெதர்லாந்து தூதரக அலுவலகங்களின் உதவியுடன் மத்திய அரசின் உதவியை நாடுவதற்கான வழிமுறைகள் குறித்து அவரிடம் எடுத்துக்கூறி அனுப்பி வைக்கப்பட்டார்’’ என தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x