14 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பெண்: நிரபராதி என உயர் நீதிமன்றம் தீர்ப்பு

14 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பெண்: நிரபராதி என உயர் நீதிமன்றம் தீர்ப்பு
Updated on
1 min read

ஒன்றரை வயது பெண் குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்ததாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தாய் 14 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பிறகு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உயர் நீதிமன்றம் தற்போது ரத்து செய்தது.

திருச்சி மாவட்டம் தாத்தையங்கார் பேட்டையை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி சகுந்தலா (49). இவர்களுக்கு 2 மகள்கள் இருந்தனர். ஒரு மகளுக்கு ஒன்றரை வயது. கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது.

இதனால் சகுந்தலா கணவரிடம் கோபித்துக்கொண்டு 2002-ல் அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றார். மறுநாள் அவரது ஒன்றரை வயது பெண் குழந்தை கிணற்றில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டது. குழந்தையை கொலை செய்து சடலத்தை கிணற்றில் வீசியதாக சகுந்தலாவை போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கை திருச்சி மாவட்ட நீதிமன்றம் விசாரித்து சகுந்தலாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. இந்த தண்டனையை ரத்து செய்யக்கோரி சகுந்தலா தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை 2014-ல் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சகுந்தா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 14 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்த பிறகு உச்ச நீதிமன்றம் சகுந்தலாவுக்கு ஜாமீன் வழங்கி, அவர் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கை நீதிபதிகள் பாரதிதாசன், நிஷாபானு அமர்வு விசாரித்தது. சகுந்தலா வழக்கறிஞர் வாதிடுகையில், சகுந்தலா தனது ஒன்றரை வயது குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்ததற்கு ஆதாரம் இல்லை. சாட்சிகளின் தகவல்கள் முன்னுக்கு பின் முரணாக உள்ளது.

பிரேத பரிசோதனை அறிக்கையில், குழந்தையின் குடல் மற்றும் நுரையீரலில் தண்ணீர் இல்லை. கண் மூடிய நிலையில் குழந்தை இறந்து கிடந்தது எனக் கூறப்பட்டுள்ளது. எனவே குழந்தை இறந்த பிறகே சடலம் கிணற்றில் வீசப்பட்டுள்ளது. சகுந்தா பெற்றோர் வீட்டிற்கு தனியாகவே சென்றுள்ளார். குழந்தையை அழைத்து செல்லவில்லை. எனவே தண்டனையை ரத்து செய்து அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றார்.

பின்னர் நீதிபதிகள், இந்த வழக்கில் சிறிய சம்பவங்கள் கூட சரியாக விசாரிக்கப்படவில்லை. சாட்சிகள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் மனுதாரருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எனவே சகுந்தலாவுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து செய்யப்படுகிறது என தீர்ப்பளித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in