Published : 27 Aug 2021 12:47 PM
Last Updated : 27 Aug 2021 12:47 PM

கோடநாடு வழக்கு; செப். 2-க்கு ஒத்திவைப்பு: போலீஸாரின் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை

நீதிமன்றத்தில் ஆஜரான சயான்.

உதகை

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு செப்டம்பர் மாதம் 2-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. காவல்துறை அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜ், தடயவியல் நிபுணர் மற்றும் மின்வாரிய கோத்தகிரி உதவிப் பொறியாளரிடம் விசாரணைக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு பகுதியில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்குச் சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இந்தத் தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களாவுக்குள் கடந்த 2017 ஏப்ரல் 23-ம் தேதி நள்ளிரவு ஒரு கும்பல் புகுந்து காவலாளி ஓம்பகதூரைக் கொலை செய்தது. பின்னர், பங்களாவுக்குள் சென்று பல்வேறு பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றது.

இந்தக் கொள்ளை, கொலை சம்பவங்களுக்கு மூளையாகச் செயல்பட்டதாக, சயான் மற்றும் கனகராஜ் ஆகியோரைக் காவல்துறையினர் சந்தேகித்தனர். இந்நிலையில், கனகராஜ் ஒரு கார் விபத்தில் உயிரிழந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக, சயான், வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு, அனைவரும் ஜாமீனில் உள்ளனர். வாளையாறு மனோஜுக்கு யாரும் உத்தரவாதம் அளிக்காததால், அவர் குன்னூர் கிளைச் சிறையில் உள்ளார்.

இந்நிலையில், இந்த வழக்கின் திருப்புமுனையாக காவல்துறையினர் சயான் மற்றும் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபாலிடம் மறு விசாரணை மேற்கொண்டனர். இவர்களிடம் மேற்கொண்ட விசாரணை அறிக்கை, கோடநாடு வழக்கு விசாரணையின்போது தாக்கல் செய்யப்படும் என போலீஸார் தெரிவித்தனர். இதனால், அனைவரும் இந்த வழக்கு விசாரணைக்காக எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

இந்நிலையில், கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு நீலகிரி மாவட்ட உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (ஆக. 27) விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு சயான் மட்டுமே ஆஜராகியிருந்தார். வாளையாறு மனோஜை போலீஸார் ஆஜர்படுத்தவில்லை.

அரசுத் தரப்பில் சிறப்பு வழக்கிறஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆஜராகினர். அதிமுக சார்பில் வழக்கறிஞர்கள் ஆனந்தகிருஷ்ணன், டி.கே.தேவராஜ், என்.சுரேஷ்குமார் மற்றும் சந்தோஷ்குமார் ஆஜராகினர்.

விசாரணை தொடங்கியதும், அரசு வழக்கறிஞர்கள், "புலன் விசாரணை நடத்தப்பட்டு வருவதால், அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் தேவை" என்றனர்.

சாட்சி அனுபவ் ரவி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆனந்த கிருஷ்ணன், "அனுபவ் ரவி மறு விசாரணை செய்யக் கூடாது எனத் தடை கோரி, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். எனவே, அந்த மனு மீது தீர்ப்பு வரும் வரை விசாரணை நடத்தக் கூடாது" என்றார்.

நீதிபதி சஞ்சய் பாபா, வழக்கு விசாரணையை செப்டம்பர் மாதம் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

அரசு வழக்கறிஞர் ஷாஜகான் கூறும்போது, "போலீஸார் புலன் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையை முடித்ததும் அறிக்கை தாக்கல் செய்யப்படும். அதற்கு கால அவகாசம் தேவை எனக் கோரினோம். நீதிபதி விசாரணையை செப்டம்பர் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். அன்றைய தினம் முதல், சாட்சிகளான கோடநாடு மேலாளர் நடராஜன், தடயவியல் நிபுணர் ராஜ்மோகன் மற்றும் மின்சார வாரிய கோத்தகிரி உதவிப் பொறியாளர் ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x