Published : 27 Aug 2021 03:12 AM
Last Updated : 27 Aug 2021 03:12 AM

உலகம் கிராமம் அருகே தமிழ் கல்வெட்டுடன் பெரிய கல் உரல்

உலகம் அருகே இலகம்பதி கிராமத்தில் தமிழ்கல்வெட்டுடன் கூடிய பெரிய கல் உரல்.

கிருஷ்ணகிரி

உலகம் அருகே தமிழ் கல்வெட்டுடன் கூடிய பெரிய கல் உரல் கண்டறியப்பட்டுள்ளதாக, அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி - ராயக்கோட்டை செல்லும் சாலையில் உலகம் அடுத்த இலகம்பதி கிராமத் தில், கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் தலைமையில் வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வு தொடர்பாக காப்பாட்சியர் கூறும்போது, இக்கிராமத்தில் மண்மேடாக உள்ள இக்கோயில் 500 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டு இருக்கலாம். இந்த இடத்தினை ஆய்வு செய்த போது பூதேவி சிலை பாதி மண்ணில் புதைந்திருந்தது. இச்சிலை 500 ஆண்டுகள் பழமையானது. இங்குள்ள இடத்தினை சுத்தம் செய்தபோது எண்ணெய் ஆட்டும் பெரிய கல் உரல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த கல்வெட்டில் உள்ள எழுத்துகள் படியெடுக்கப்பட்டது. இந்த உரலின் கிழக்குபக்கத்தில் 8 வரிகள் கொண்ட தமிழ்கல்வெட்டு உள்ளது. இந்த செக்கு உரலை பார்த்தீப ஆண்டில், ஆடி மாதம் 3-ம் தேதி இலம்பாதன் என்பவருக்காக உரல் செய்து தானமாக அளித்த செய்தியை கூறுகிறது. இந்த பகுதி இன்றும் இக்கம்பதி என்று அழைக்கப்படுவதாக ஊர் பெரியவர்கள் தெரிவித்தனர். இவ்வாறு காப்பாட்சியர் கூறினார்.

ஆய்வின் போது வரலாற்று ஆய்வாளர்கள் சதாநந்த கிருஷ்ணகுமார், சரவணகுமார், தமிழ்செல்வன், பிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x