தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை மீண்டும் சேர்க்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்: கோப்புப்படம்
முதல்வர் ஸ்டாலின்: கோப்புப்படம்
Updated on
1 min read

எழுத்தாளர் பாமா, கவிஞர் சுகிர்தராணி ஆகியோரின் எழுத்துகளைக் கட்சி அரசியல், மதவாதக் கண்ணாடிகள் அணிந்து பார்க்கும் வழக்கத்தைக் கைவிட்டு, அவற்றை டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் மீண்டும் சேர்த்திட வேண்டும் என, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (ஆக. 26) வெளியிட்ட அறிக்கை:

"டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருந்த தமிழ் எழுத்தாளர் பாமாவின் சங்கதி, தமிழ்க் கவிஞர் சுகிர்தராணியின் கைம்மாறு, என்னுடல் ஆகிய மொழியாக்கப் படைப்புகளை அந்தத் துறை பேராசியர்களின் கவனத்துக்குக் கொண்டு செல்லாமலேயே, மேற்பார்வைக் குழுவின் ஆலோசனையின் பெயரில் பல்கலைக்கழக நிர்வாகம் நீக்கியிருப்பது ஒருதலைபட்சமான முடிவு. இது எவ்வகையிலும் ஏற்க முடியாத செயலாகும்.

பெண்கள் உரிமை, ஒடுக்கப்பட்டோர் விடுதலை, மானுட மேன்மை குறித்து பல படைப்புகளை வழங்கி வரும் எழுத்தாளர் பாமா, கவிஞர் சுகிர்தராணி ஆகியோரின் எழுத்துகளைக் கட்சி அரசியல், மதவாதக் கண்ணாடிகள் அணிந்து பார்க்கும் வழக்கத்தைக் கைவிட்டு, அவற்றை டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் மீண்டும் சேர்த்திட வேண்டும் எனப் பல்கலைக்கழக நிர்வாகத்தையும் ஒன்றிய அரசையும் வலியுறுத்துகிறேன்".

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in