Published : 26 Aug 2021 03:14 AM
Last Updated : 26 Aug 2021 03:14 AM
எல்ஐசி நிறுவனத்தில் முகவர்களாக செயல்படுபவர்கள் வாடிக்கையாளர்களின் பாலிசி விவரங்களை மின்னணு முறையில் பதிவு செய்ய வசதியாக ‘ஆனந்தா’ என்ற பெயரில் மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து எல்ஐசி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஆத்ம நிர்பார் திட்டத்தின் ஒரு பகுதியாக, எல்ஐசி முகவர்கள் வாடிக்கையாளர்களை பல்வேறு பாலிசிகளில் சேர்க்கும்போது காகிதம் இல்லாமல் மின்னணு முறையிலேயே அவர்களின் விவரங்களைப் பெற்று சமர்ப்பிக்கும் வகையில் ஆனந்தா செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
புதிய செயலி மூலம் வாடிக்கையாளர்களின் விவரங்களை ஆதார் எண் அடிப்படையில் உறுதி செய்யவும், காகிதத்தில் விண்ணப்பப் படிவம் இல்லாமல் மின்னணு முறையிலேயே விண்ணப்பங்களைப் பெறவும் முகவர்களால் முடியும். இதன் மூலம் அவர்களின் பணி விரைவில் முடிவதோடு, அதிக வாடிக்கையாளர்களை பெறவும் முடியும்.
புதிய செயலியை எல்ஐசி இந்தியா தலைவர் எம்.ஆர்.குமார் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அவர் கூறும்போது, “ஆனந்தா இணையதளத்தின் பயன்பாடு அதிகமாக இருந்ததால் இந்தப் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதை அனைத்துமுகவர்களும் புரிந்துகொண்டு பயன்படுத்த வேண்டும். இதை உருவாக்கிய தகவல்தொழில்நுட்பக் குழுவினருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
இந்நிகழ்ச்சியில் நிர்வாக இயக்குநர்கள் முகேஷ்குமார் குப்தா, ராஜ்குமார், சித்தார்த்த மொஹந்தி, மினி ஐப் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
தொடக்க விழாவில் முகவர்களுக்கு வீடியோ மூலம் ஆனந்தா செயலியை பயன்படுத்தும் முறை, அதில் உள்ள தனிச்சிறப்புகள் குறித்து விளக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT