

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கடந்த 2018 ம் ஆண்டு போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் உள்ள சுங்கச்சாவடியை தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் தலைமையிலான கட்சியினர் முற்றுக்கையிட்டபோது, அந்த சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டது.
இது குறித்து உளுந்தூர்பேட்டை போலீஸார் தி.வேல்முருகன் உள்பட 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இது குறித்த வழக்கு உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்ட வழக்கு, உளுந்தூர்பேட்டை முதலாவது நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி சண்முகநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் 5 பேர் மட்டு அஜராகினர். தி.வேல்முருகன் எம்.எல்.ஏ, த வா க மாவட்டச் செயலாளர் ராஜேஷ் உள்பட 9 பேர் ஆஜராகவில்லை.
இவ்வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாத தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. உள்பட 9 பேருக்கு பிடியாணை பிறப்பித்து நீதிபதி சண்முகநாதன் உத்தரவிட்டார். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை வரும் செப்டம்பர் 1 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.