கூட்டுறவு வங்கி நகைக் கடனில் ரூ.7 கோடி மோசடி: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

அமைச்சர் தா.மோ.அன்பரசன்: கோப்புப்படம்
அமைச்சர் தா.மோ.அன்பரசன்: கோப்புப்படம்
Updated on
1 min read

தமிழ்நாடு தொழிலகக் கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை வைத்துக் கடன் பெற்றதில், ரூ.7 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றதாக, ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

2021-2022ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. இன்று (ஆக. 25) கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, திருத்தணி திமுக எம்எல்ஏ சந்திரன், கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடனில் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பின் அவை களையப்பட வேண்டும் என்பதை முன்னிறுத்திப் பேசினார்.

அப்போது பேசிய ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், "தமிழ்நாடு தொழிலகக் கூட்டுறவு வங்கியில் சிறு, குறு நிறுவனங்கள் பெயரில் போலி நகைகளை வைத்து, ரூ.7 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றுள்ளது. சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள 5 தொழிலகக் கூட்டுறவு வங்கிகளில் இத்தகைய மோசடி நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக, மொத்தம் 45 வங்கிக் கிளைகளில் தற்போது ஆய்வு நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்தார்.

கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், அவற்றைக் களைந்தெடுத்த பிறகு, நகைக் கடன் தள்ளுபடி குறித்த தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ரூ.7 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றுள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in