

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில், வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு பிரத்யேகமாக10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி முந்தைய அதிமுக ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
25 வழக்குகள்
இதை எதிர்த்து 25-க்கும்மேற்பட்ட வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.கண்ணம்மாள் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வன்னியர் சமுதாயத்துக்காக மட்டும் தேர்தல் ஆதாயத்தைக் கருத்தில் கொண்டு உள் இடஒதுக்கீடு வழங்கி சட்டம்பிறப்பித்து இருப்பது சட்டவிரோதமானது. இதனால் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் உள்ள பிறசமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் கடுமையான பாதிப்பை சந்திக்கநேரிடும்என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால் அரசு தரப்பில், ‘‘இந்த இடஒதுக்கீட்டால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்பதால் அந்த சட்டத்துக்கு தடை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை’’ என வாதிடப்பட்டது.
அதையடுத்து, இந்த வழக்கில் இடைக்கால கோரிக்கை மீதான வாதங்களை இருதரப்பும் இன்று (ஆக.25) முன்வைக்க உத்தரவிட்ட நீதிபதிகள், அதைப்பொருத்து இடைக்கால உத்தரவு பிறப்பிப்பது தொடர்பாக இன்றுமுடிவு எடுக்கப்படும் என்று கூறிவிசாரணையை தள்ளிவைத்தனர்.