Published : 24 Aug 2021 04:22 PM
Last Updated : 24 Aug 2021 04:22 PM

கோடநாடு வழக்கு: ஜெ. ஓட்டுநர் கனகராஜின் அண்ணனிடம் போலீஸார் தீவிர விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரும், எடப்பாடி பழனிசாமியின் உறவினருமான கனகராஜின் சகோதரர் தனபால் உதகையில் நடந்த போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜரானார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு பகுதியில் ஜெயலலிதா, சசிகலாவுக்குச் சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இந்தத் தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களாவுக்குள் 2017 ஏப்ரல் 23-ம் தேதி நள்ளிரவு ஒரு கும்பல் புகுந்து காவலாளி ஓம் பகதூரைக் கொலை செய்தது. பின்னர், பங்களாவுக்குள் சென்று பல்வேறு பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றது.

இந்தக் கொள்ளை, கொலை சம்பவங்களுக்கு மூளையாகச் செயல்பட்டதாக சயான், கனகராஜ் ஆகியோரைக் காவல்துறையினர் சந்தேகித்தனர். இந்நிலையில், கனகராஜ் ஒரு கார் விபத்தில் உயிரிழந்தார். கனகராஜ் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது அண்ணன் தனபால் கூறிவந்தார்.

இந்நிலையில், மீண்டும் சயானிடம் கோத்தகிரி போலீஸார் விசாரணை நடத்த சம்மன் அனுப்பினர். கடந்த வாரம் உதகையில் உள்ள பழைய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்த விசாரணையில் சயான் ஆஜரானார். அவரிடம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தினார்.

இந்நிலையில், கனகராஜின் அண்ணன் தனபாலும் விசாரணைக்கு ஆஜராகுமாறு கோத்தகிரி காவல்துறையினர் சம்மன் அனுப்பியிருந்தனர். அதன்படி, உதகையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத் முன்னிலையில், இன்று ஆஜரான தனபாலிடம் போலீஸார் ரகசியமாக ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ’’முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைவர் என்ற சந்தேகம் தனக்கு இருப்பதால் அவரிடம் விசாரிக்க வேண்டும்’’ என்று தான் கூறிய வாக்குமூலத்தைக் காவல்துறையினர் பதிவு செய்துகொண்டதாக தனபால் தெரிவித்தார்.

தனபாலிடம் மேற்கொண்ட விசாரணை அறிக்கை, கோடநாடு வழக்கு விசாரணையில் வரும் 27-ம் தேதி உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x