Last Updated : 24 Aug, 2021 02:44 PM

 

Published : 24 Aug 2021 02:44 PM
Last Updated : 24 Aug 2021 02:44 PM

பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல்: ஆளுநரைச் சந்தித்த புதுவை முதல்வர்

பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் தந்துள்ள சூழலில் ராஜ்நிவாஸ் சென்ற முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்க வருமாறு ஆளுநர் தமிழிசைக்கு அழைப்பு விடுத்தார்.

புதுச்சேரியில் கடந்த ஆட்சியில் ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையில் தொடர்ந்து மோதல் நிலவி வந்தது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி அரசு ஆட்சியமைத்துள்ளது. இக்கூட்டணி அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 26-ம் தேதி காலை ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. அன்று மாலை பட்ஜெட் தாக்கலாகிறது.

இந்நிலையில் இன்று காலை ராஜ்நிவாஸுக்கு முதல்வர் ரங்கசாமி சென்றார். அவர் அங்கு மரியாதை நிமித்தமாக ஆளுநர் தமிழிசையைச் சந்தித்து உரையாடினார். பின்னர் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க வருமாறு முறைப்படி ஆளுநர் தமிழிசைக்கு அழைப்பு விடுத்தார்.

சட்டப்பேரவை நடவடிக்கைகள், பட்ஜெட் தொடர்பாக அவர் உரையாடினார்.

இதுபற்றி துணைநிலை ஆளுநர் தமிழிசை கூறுகையில், "புதுச்சேரியில் தமிழில் பதவியேற்றேன். அமைச்சர்கள் பதவியேற்பையும் தமிழில் நடத்தினேன். இது இரட்டிப்பு மகிழ்ச்சி. தற்போது புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல் முறையாகத் தமிழில் உரையாற்ற உள்ளேன்.

தெலங்கானா ஆளுநராக இருந்தாலும் உயிரான தமிழில் அங்கு உரையாற்ற முடியாது. எனினும், புதுச்சேரியில் ஆளுநர் உரையில் தமிழ் உரை என்பதில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மகிழ்ச்சி தருகிறது. இது எனது ஆயிரம் மடங்கு மகிழ்ச்சி. பட்ஜெட்டுக்கு மத்திய அரசு அனுமதி தந்துள்ளது. பட்ஜெட்டில் அதிக முதலீடு புதுச்சேரிக்குக் கிடைத்துள்ளது. மாநில வளர்ச்சிக்கு நான் உறுதுணையாக இருப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x