Last Updated : 24 Aug, 2021 12:21 PM

 

Published : 24 Aug 2021 12:21 PM
Last Updated : 24 Aug 2021 12:21 PM

சிஆர்பிஎஃப் வீரர்கள் சைக்கிள் பேரணி: எஸ்.பி. வரவேற்பு

விருதுநகர்

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை நினைவுகூரும் வகையில் கன்னியாகுமரியில் இருந்து டெல்லி செல்லும் தென்மண்டல சிஆர்பிஎஃப் வீரர்கள் இன்று காலை விருதுநகர் வந்தடைந்தனர். அவர்களுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மனோகர் வரவேற்பு அளித்தார்.

கன்னியாகுமரியில் தொடங்கிய சிஆர்பிஎஃப் வீரர்களின் சைக்கிள் பேரணியைத் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். 'ஆசாதி கா அம்ருத் மகா உத்ஸவ்' என்ற தலைப்பில், மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் 20 பேர் சிஆர்பிஎஃப் உதவி ஆணையர் பிரதீப் தலைமையில் டெல்லி ராஜ்பவன் வரை சுமார் 2,850 கி.மீ. தொலைவிற்கு சைக்கிள் பேரணி மேற்கொள்கிறார்கள். இப்பேரணியானது நமது நாட்டின் சகோதரத்துவம் , சமூக நீதி, மதச்சார்பின்மை போன்ற கோட்பாடுகளைப் பேணிக் காக்க மேற்கொள்ளப்படுகிறது.

இப்பேரணி கன்னியாகுமரி திருவேணி சங்கமத்திலிருந்து தொடங்கி, தமிழ்நாட்டில் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தலைவர்கள் வாழ்ந்த திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் வழியாக கர்நாடகா சென்று தொடர்ந்து ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் வழியாகச் சென்று அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்திக்கு முன்னதாக டெல்லி ராஜ்பவன் சென்றடையவுள்ளது .

இன்று காலை சிஆர்பிஎஃப் வீரர்களின் சைக்கிள் பேரணி விருதுநகர் வந்தடைந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மனோகர் பங்கேற்று சிஆர்பிஎஃப் வீரர்களை வரவேற்று நினைவுப் பரிசுகள் வழங்கி கவுரவித்தார். மேலும், தேசப்பற்றுடன் நடைபெறும் இந்த சைக்கிள் பேரணி வெற்றி பெற வாழ்த்துகளையும் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து சிஆர்பிஎஃப் வீரர்கள் மதுரை நோக்கி சைக்கிள் பயணத்தைத் தொடர்ந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x