Published : 24 Aug 2021 03:13 AM
Last Updated : 24 Aug 2021 03:13 AM
‘G’ அல்லது ‘அ’ எழுத்து மற்றும் ‘Human Rights' என்று எழுதியுள்ள தனியார் வாகனங்களில் சோதனை நடத்தும்படி அனைத்து சோதனைச்சாவடிகளில் உள்ள போலீஸாருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ஏராளமான தனியார் வாகனங்களில் அரசு வாகனங்கள் போல ‘G’ அல்லது ‘அ’ எழுத்து உள்ளது. சிலர் Human Rights, Police, On Govt. Duty, Press, Lawyer என்ற ஸ்டிக்கர் அல்லது போர்டு வைத்துசொந்த வாகனங்களை இயக்கிவருகின்றனர். வாகனச் சோதனையின்போது இவர்கள் போலீஸாருக்கு ஒத்துழைப்பதில்லை. இதுபோன்ற ஸ்டிக்கர்கள் அல்லது போர்டுகள் வைத்து வரும் வாகனங்களை போலீஸாரும் விட்டுவிடுகின்றனர்.
ஆனால், இதுபோன்ற போர்டுகள் வைத்துக் கொண்டு சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன. அதைத் தொடர்ந்து இதுபோன்ற போர்டுகள் வைத்துக் கொண்டு வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி, சோதனை செய்ய காவல்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழகம் முழுவதும் சோதனைச் சாவடிகளில் பணிபுரியும் போலீஸாருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
‘அ’ அல்லது ‘G', Human Rights, Police, On Govt. Duty, Press, Lawyer போன்ற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட வாகனங்களை சோதனை செய்துதனியாக அறிக்கை தயார் செய்ய வேண்டும். அதில் அவர்கள் வைத்துள்ள ஸ்டிக்கர் அல்லது போர்டின் விவரங்கள் இருக்க வேண்டும்.
மேலும், S.No., Date & Time, Vehicle Registration No., User name, Address, Cell No., Office address, Designation, From, To, Vahan app details ஆகியவை இருக்க வேண்டும். இந்த வாகனங்களின் விவரங்களை தினமும் காவல் உதவி ஆணையர் அல்லது டிஎஸ்பிஅலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், சோதனையின்போது தகராறில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் காவல் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT