Last Updated : 22 Aug, 2021 06:09 PM

 

Published : 22 Aug 2021 06:09 PM
Last Updated : 22 Aug 2021 06:09 PM

காப்பீடு செய்யாவிட்டாலும் பயிர்களுக்கு இழப்பீடு: அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம்

கடலூர்

பயிர்களுக்குக் காப்பீடு செய்யாவிட்டாலும் இழப்பு ஏற்பட்டால் இழப்பீடு வழங்கப்படும் என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் கடலூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கடலூர் விருந்தினர் மாளிகையில் இன்று (அக்.22) செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் கூறியதாவது:

’’வேளாண்மைத் துறைக்கு என்னை அமைச்சராக்கிய முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். வேளாண்மை துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தேர்தல் வாக்குறுத்தி அளித்து அதன்படியே வேளாண்மைக்குத் தனிநிலை அறிக்கை தாக்கல் செய்து அரசு புதிய வரலாறு படைத்துளாளது. அந்த நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய வைத்த முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

விவசாயிகள் உள்பட அனைத்துத் தரப்பினரும் பாராட்டும் வகையில் அமைந்துள்ள வேளாண் நிதிநிலை அறிக்கையை, சிலர் காழ்ப்புணர்ச்சியால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில், நடப்பு குறுவைப் பருவத்திற்கான காப்பீடு ஏன் அறிவிக்கப்படவில்லை என்று விமர்சனம் எழுப்பி விமர்சனம் செய்கின்றனர். ஆனால் குறுவையில் நல்ல சாகுபடி உற்பத்தியாகியுள்ளது. ஆனால் முந்தைய அதிமுக அரசு காப்பீடு செய்வதற்கான முயற்சியை மேற்கொள்ளவில்லை. இதனால், நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் காப்பீட்டு நிறுவனத்தைத் தேர்வு செய்வதற்காக 3 முறை ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது. இதனை இறுதி செய்வதற்கான கால அவகாசத்திற்குள் 4.90 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது.

இதுவரை, 54 ஆயிரம் ஏக்கரில் நெல் அறுவடை செய்யப்பட்டு 3.27 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. டெல்டா பகுதியில் 655 நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்னும் 20 நாட்களில் குறுவை சாகுபடி முடிய உள்ளது. எனவே, இனிமேல் குறுவை சாகுபடிக்கான காப்பீடு தேவைப்படாது. எனினும், காப்பீடு இல்லாவிட்டாலும் பயிர்களுக்கு இயற்கை இடர்பாடுகளால் இழப்பு ஏற்பட்டால் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்து உள்ளார். எனவே, குறுவைக்கான காப்பீட்டை விவசாயிகள் கேட்கவில்லை.

2020-21ஆம் ஆண்டில் சம்பா பருவத்தில் நெல் உள்பட பல்வேறு பயிர்களுக்கு மாநில அரசு செலுத்த வேண்டிய பிரீமியம் ரூ.1,248.92 கோடியைக் கடந்த 16-ம் தேதிதான் அரசு விடுவித்துள்ளது. கரும்பு விவசாயிகளுக்குத் தனியார் சர்க்கரை ஆலைகள் சுமார் ரூ.1,500 கோடி வரையில் பாக்கி வைத்துள்ளன. கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் வைத்துள்ள நிலுவையில் ரூ.220 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. விரைவில் முத்தரப்புக் கூட்டம் நடத்தப்பட்டு பாக்கித் தொகையைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும்.

எங்கும் உரத் தட்டுப்பாடு இல்லை. தேவைப்படும் இடங்களுக்குத் தேவையான அளவு அனுப்பி வைக்கப்படுகிறது. மற்ற பயிர்களுக்குக் காப்பீட்டு பிரீமியம் செலுத்த வரும் 31-ம் தேதி கடைசி நாளாகும். கால நீட்டிப்பு செய்யும் வாய்ப்பு இல்லை. கூட்டுறவுக் கடன் சங்கங்களில் வழக்கம்போல அனைத்துக் கடன்களும் வழங்கப்படுகின்றன. அதிமுக ஆட்சியின்போது தலைவர்களாகப் பொறுப்பேற்றவர்கள்தான் அரசுக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகின்றனர். இந்த அரசு எப்போதும் விவசாயிகளின் நலனில் அக்கறையுள்ள அரசாக இருக்கும்’’.

இவ்வாறு அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

அப்போது மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்பிரமணியம், காவல் கண்காணிப்பாளர் சி.சக்திகணேசன், கடலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கோ.ஐயப்பன், திமுக நிர்வாகிகள் பி.பாலமுருகன், ராஜா, நடராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x