

சென்னை - அரக்கோணம் தடத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் இன்றுமுதல் மின்சார ரயில்கள் சேவை 185 ஆக அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு தேவைக்கேற்ப, மின்சார ரயில்கள் அதிகரித்து இயக்கப்படுகின்றன. அந்த வகையில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று, இன்று (ஞாயிறு) முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் மின்சார ரயில்கள் அதிகரித்து இயக்கப்படவுள்ளன. அதன்படி, சென்னை கடற்கரை - ஆவடி 2,ஆவடி - சென்னை கடற்கரை 2,சென்னை கடற்கரை - திருவள்ளூர் 6, திருவள்ளூர் - சென்னை கடற்கரை 6, சென்னை சென்ட்ரல் - திருத்தணி 2, திருத்தணி - சென்னை சென்ட்ரல் 2 என ரயில்களின் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை - அரக்கோணம் தடத்தில் ஏற்கெனவே ஞாயிற்றுக்கிழமைகளில் 165 ஆக இருந்த ரயில்கள் சேவை தற்போது 185 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே கூட்ட நெரிசலைத் தவிர்த்து,கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பயணிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.