

சென்னை டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார் (52). 102 -வது வட்ட திமுக அவைத்தலைவர். கடந்த 18-ம் தேதி இரவு அண்ணா நகர் காவல் நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, வழிமறித்த கும்பல் சம்பத்குமாரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது. அவரது சடலத்தை கைப்பற்றிய அண்ணா நகர் போலீஸார் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக கீழ்பாக்கத்தை சேர்ந்த மீன் வியாபாரி ஹரிகுமார், ஸ்ரீதர், மோகனவேல், நவீன் குமார், விநாயகம், இவரது மனைவி கற்பகம் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், டி.பி.சத்திரம் 18-வது குறுக்கு தெருவை சேர்ந்த பாலாஜி, அவரது மனைவி அமிர்தம் ஆகியோரை அண்ணா நகர் போலீஸார் நேற்று கைது செய்தனர். போலீஸ் இன்பார்மராக இருந்து வந்த சம்பத்குமார், கடந்த சில நாட்களுக்கு முன் தான் வசிக்கும் பகுதியில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி பதுங்கி இருந்தது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்க அவர் கைது செய்யப்பட்டார். இதனால் ஆத்திரத்தில் இருந்த ரவுடியின் உறவினர்கள் சம்பத் குமாரை கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.