Published : 21 Aug 2021 12:45 PM
Last Updated : 21 Aug 2021 12:45 PM

பழனி அருகே ஒரே குடும்பத்தில் 4 பேர் சந்தேக மரணம்: போலீஸ் விசாரணை

பழனி அருகே விவசாயி, தனது மனைவி, மகன், மகளுடன் மக்காச்சோளத் தட்டைப் போரில் தீப்பற்றிய நிலையில் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது கொலையா, தற்கொலையா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே வத்தக்கவுண்டன் வலசு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சின்னராசு என்கிற முருகேசன் (52). இவரது மனைவி வளர்மதி (45), மகள் சிவரஞ்சனி (21), மகன் கார்த்திகேயன் (18). மகன் மற்றும் மகள் இருவருமே கல்லூரியில் படித்து வந்தனர். முருகேசனுக்கு ஜந்து ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.

முருகேசன் நேற்று குடும்பத்தினருடன் வேலாயுதம் புதூரில் நடந்த திருமண நிகழ்ச்சிக்குச் சென்று, நேற்று இரவு அனைவரும் வீடு திரும்பினர். இந்நிலையில் இன்று அதிகாலை இரண்டு மணியளவில் வத்தக்கவுண்டன் வலசில் மக்காச்சோளத் தட்டை தீப்பிடித்து எரிவதாக பழனி தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது மக்காச்சோளத் தட்டைக்குள் இறந்த நிலையில் நான்கு பேரின் உடல்கள் இருப்பது தெரியவந்தது.

அதிர்ச்சி அடைந்த தீயணைப்புத் துறையினர் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். விரைந்து சென்று போலீஸார் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தது முருகேசன், மனைவி வளர்மதி, மகள் சிவரஞ்சனி, மகன் கார்த்திகேயன் எனத் தெரியவந்தது. முருகேசன், குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு யாருக்கேனும் இதில் தொடர்புடையதா என போலீஸார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ''இறந்தவர்களின் வீட்டில் எவ்விதப் பொருளும் திருடு போகவில்லை. முதற்கட்டமாக சந்தேக மரணம் என்று வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். பிரேதப் பரிசோதனை முடிவில் விவரங்கள் தெரியவரும்'' என்று தெரிவித்தனர்.

திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. சீனிவாசன், காவல்துறை டிஐஜி விஜயகுமாரி, தென்மண்டல ஐ.ஜி. அன்பு, டிஐஜி விஜயகுமாரி, திண்டுக்கல் எஸ்.பி. அன்பு ஆகியோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கடன் பிரச்சினை இல்லாத நிலையில் நடந்திருக்கும் இந்தச் சம்பவம் குறித்து தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் ரூபி உதவியுடன் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x