Published : 21 Aug 2021 07:00 AM
Last Updated : 21 Aug 2021 07:00 AM

இன்று ஓணம் பண்டிகை கொண்டாட்டம்- முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

ஓணம் பண்டிகையை முன்னிட்டு,மலையாள மொழி பேசும் மக்களுக்கு தமிழக முதல்வர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:

முதல்வர் ஸ்டாலின்: சகோதரத்துவம், சமூக நல்லிணக்கத்தின் பெருமைமிகு அடையாளமாக ஓணம் பண்டிகை திகழ்கிறது. அன்புக்கும், ஈகைப் பண்புக்கும் மிகச் சிறந்த அடையாளமாக விளங்கும் ஓணம் திருநாளில், திராவிட மொழிகளில் ஒன்றான மலையாள மொழி பேசும் தமிழ்நாடு வாழ் மலையாள மக்களும், கேரள மக்களும் நலமிகு வாழ்வும், அனைத்துவளங்களும் பெற்று இன்புற்றிருக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி: அன்பு, அமைதி, சகோதரத்துவம் வளர்க்கப்பட வேண்டும். அகந்தையும், ஆணவமும் அகற்றப்பட வேண்டும் என்றஉயரிய கருத்தை அனைவரும் அறியும் வகையில், மலையாள மொழி பேசும் மக்கள் அனைவராலும் கொண்டாடப்படும் இந்ததிருவோணத் திருநாளில் எங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: தமிழர்களுடைய ஒட்டுமொத்த வளர்ச்சியில் எவ்விதவேறுபாடுமின்றி பண்பாடு, கலாச்சாரத்தை தனித்தன்மையுடன் காப்பாற்றி, சமூக நல்லிணக்கத்தோடு தமிழகத்தில் வாழ்ந்து வரும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் ஓணம் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: மக்களை நேசித்த மன்னன் மகாபலி, மக்களை சந்திக்க வரும் திருவோணம் திருநாளைக் கொண்டாடும் மலையாள மொழி பேசும்மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: கேரள மக்கள் ஓணம் பண்டிகையை சாதி, மத வேறுபாடின்றிகொண்டாடுவது மகிழ்ச்சிக்குரியது. ஓணம் எனும் திருவோணத் திருநாளை புத்தாண்டாக கொண்டாடும் மலையாள மக்கள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ தமாகா சார்பில் வாழ்த்துகிறேன்.

சமக தலைவர் சரத்குமார்: பாரம்பரிய, பண்பாடுமிக்க கேரள மக்களின் உள்ளம் மகிழ்ச்சியில் திளைக்கும் வகையில் ஓணம் பண்டிகை சீரும், சிறப்புமாக அமைய என வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: மலையாள மொழி பேசும் மக்கள் அனைவரும் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு மொழியால் இணைந்து கொண்டாடும் இத்திருநாளின் மூலம் சகோதரத்துவம், ஒற்றுமை தழைத்தோங்கட்டும்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிமுன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர்: உலகெங்கும் வாழும் அனைத்து மலையாள மொழி பேசும் மக்களுக்கும் எனது ஓணம்திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாரிவேந்தர்: சமுதாயத்தில் சமாதானத்துக்கும், சமூக ஒற்றுமைக்கும் உழைக்கும் அனைவருக்கும் இந்த ஓணம் நாளில் சகோதரத்துவம் வலு வடைந்து தேச ஒற்றுமை வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் ரவி பச்சமுத்து: தமிழகம், கேரளா மற்றும் உலகமெங்கும் வாழும் மலையாள சகோதர, சகோதரிகளுக்கு இந்திய ஜனநாயககட்சி சார்பில் இனிய ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x