

போலி வேலைவாய்ப்பு நிறுவனங்களிடம் ஏமாற்றம் அடைவதைத் தடுக்க, இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என, மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளர் பணிக்கு நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும்படி, 2017-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதனுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டது தொடர்பாக, தாமாக முன்வந்து சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இந்த வழக்கை இன்று (ஆக. 20) விசாரித்த நீதிபதிகள், கிருபாகரன் மற்றும் வைத்தியநாதன் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், சிபிசிஐடி சைபர் கிரைம் குற்றப்பிரிவு நடத்திய விசாரணையில், பாரதிராஜா என்ற பொறியியல் பட்டதாரி தன்னிடம் பணம் பறிக்க முயன்ற போலி நிறுவனத்துக்கு நீதிபதியின் முகவரி மற்றும் மொபைல் எண்ணையும் அளித்துள்ளார் என்பது தெரியவந்தது.
மேலும், 80 பேரிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 9 லட்சத்து 28 ஆயிரத்து 850 ரூபாய் மோசடி செய்யப்பட்டதாகவும், இது சம்பந்தமாக சித்ரா என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், இந்த வழக்கில் தொடர்புடைய பிரதாப் மற்றும் ராஜ் தலைமறைவாக உள்ளதால், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியவில்லை என்றும் சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, சித்ரா மீதான வழக்கைத் தனியாகப் பிரித்து 6 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும் என, திருநெல்வேலி நீதிமன்றத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், கரோனா ஊரடங்கு பாதிப்பை சாதகமாகப் பயன்படுத்தி, சமீபகாலமாக, போலி வேலைவாய்ப்பு நிறுவனங்கள் இளைஞர்களை மோசடி செய்துள்ளதாகவும், ஏமாற்றம் அடைந்த இளைஞர்கள் பலர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திலேயே ஒருவர் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது குறித்துச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், வேலை வாங்கித் தருவதாகக் கூறி நடைபெறும் மோசடி மற்றும் வேலைவாய்ப்பின்மை பிரச்சினையைச் சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று யோசனை தெரிவித்து, இந்த வழக்கை முடித்து வைத்தனர்.
மேலும், இந்த மோசடி குறித்த விசாரணையில் சிபிசிஐடி போலீஸார் சுணக்கம் காட்டுவதாகத் தெரிந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என அறிவுறுத்தி, விசாரணையை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குத் தள்ளிவைத்துள்ளனர்.