Published : 20 Aug 2021 02:57 PM
Last Updated : 20 Aug 2021 02:57 PM

10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று சென்னை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று (ஆக. 20) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, தமிழகத்தில் இன்று ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், அரியலூர், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், உள் மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அவ்வப்போது, கனமழையும் இருக்கக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அவ்வப்போது, கனமழையும் இருக்கக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு (சென்டி மீட்டரில்):

கேளம்பாக்கம் (செங்கல்பட்டு) 5, திருப்போரூர் (செங்கல்பட்டு) 4, தாம்பரம் (செங்கல்பட்டு), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்) தலா 3, ஆம்பூர் (திருப்பத்தூர்), வந்தவாசி (திருவண்ணாமலை), சின்னக்கல்லாறு (கோவை) தலா 2, சிட்டாம்பட்டி (மதுரை), மதுராந்தகம் (செங்கல்பட்டு), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), சோலையாறு (கோவை), டிஜிபி அலுவலகம் (சென்னை), காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை), சென்னை விமான நிலையம், மேட்டுப்பட்டி (மதுரை), ஆலந்தூர் (சென்னை), செய்யாறு (திருவண்ணாமலை), வேலூர், காஞ்சிபுரம் தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

அரபிக் கடல் பகுதிகள்:

20.08.2021 முதல் 24.08.2021 வரை: தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்".

இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x