Published : 20 Aug 2021 02:53 PM
Last Updated : 20 Aug 2021 02:53 PM

மக்கள் திட்டங்களுக்குப் பணமில்லை; பக்கம் பக்கமாக விளம்பரங்களா?- திமுக அரசுக்கு அண்ணாமலை கேள்வி

சென்னை

மக்கள் திட்டங்களுக்குப் பணம் இல்லை. ஆனால் தமிழக அரசு, பக்கத்து மாநிலத்தில் பக்கம் பக்கமாக விளம்பரங்களைப் பெரும் பொருட்செலவில் செய்து வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

''கரோனாவினால் பொருளாதாரம் மிக மோசமான சரிவினைக் கண்டுள்ள நிலையில், தமிழக அரசு நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றது. அதே சமயம் கடன் அளவும் தொடர்ந்து உயர்ந்து வருகின்றது.

இந்திய நாட்டின் பிற மாநிலங்களிலும் கடன் வாங்குவார்கள். ஆனால் அவை எல்லாம் முதலீடு செய்ய வாங்கப்படும் கடன் ஆகும். ஆனால், இங்கு வருவாய்ப் பற்றாக்குறையைச் சரி செய்வதற்காக அதிக வட்டிக்குக் கடன் வாங்கி உள்ளனர்.

தமிழக அரசின் நிதி நிலவரம் குறித்து நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கை வெளியிட்டும், பட்ஜெட் உரையிலும், தமிழ்நாட்டில் பெருகிவரும் கடன் சுமை குறித்தும், தொடர்ந்து ஏற்படும் வருவாய் இழப்பு குறித்தும் புள்ளிவிவரங்களுடன் விளக்கி இருந்தார்.

1999- 2000ஆம் ஆண்டில் ரூ.18,989 கோடி கடன் இருந்தது. இது 2000-2001ஆம் ஆண்டில் ரூ.28,685 கோடி ஆக உயர்ந்தது. 2011- 2012ஆம் ஆண்டில் ரூ.1,03,999 கோடி, 2015-2016ஆம் ஆண்டில் ரூ.2,11,483 கோடியாக இந்தக் கடன் உயர்ந்தது. கடந்த 2017-2018ஆம் ஆண்டில் ரூ.3,14,366 கோடியாக இருந்தது. 2021-ம் ஆண்டில் மொத்தக் கடன் ரூ.5,70,189 கோடியாக உயர்ந்துள்ளது.

இதனால் தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் மொத்தம் ரூ.2,63,976 கடன் உள்ளது. தமிழ்நாட்டின் வருவாய்ப் பற்றாக்குறை என்பது 3.16 சதவிகிதமாக உள்ளது. இதற்கு முன் தமிழ்நாடு இவ்வளவு பெரிய பற்றாக்குறையைச் சந்தித்தது கிடையாது.

இந்த பட்ஜெட்டின் கவலைக்குரிய அம்சம் என்றால், அது தமிழக அரசின் பெருகிவரும் கடன்தான். இனி என்ன செய்து தமிழக அரசாங்கம் இந்தக் கடனைத் திரும்பக் கட்டி முடிக்கப்போகிறது என்ற கேள்விக்கு திமுக அரசின் பட்ஜெட்டில் பதில் கிடைக்காமலே இருக்கிறது.

இந்த ஆட்சியின்‌ 100 நாள்‌ செயல்பாடுகளில் நீட் தேர்வு, நகைக்கடன் தள்ளுபடி, கல்விக் கடன் ரத்து, விவசாயக் கடன் ரத்து, இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய், டீசல், பெட்ரோல் விலை என்று எல்லா வாக்குறுதிகளையும் நம்பி மக்கள்‌ ஏமாற்றம்‌ அடைந்து நிற்கிறார்கள்‌.

இந்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்ற இயலாமல் போனதற்குக் காரணம் அரசின் மோசமான நிதி நிலைமை என்று கூறும் அரசு, தங்கள் நூறுநாள் சாதனைகளைக் கர்நாடகம், தெலங்கானா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில்கூட, பத்திரிகைகளில் முழுப்பக்க விளம்பரங்களைப் பெரும் பொருட்செலவில் செய்து வருகிறார்கள்.

மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தவே அரசிடம் செலவுத் தொகை இல்லை என்று சொல்லும் தமிழக அரசு, எந்த அடிப்படையில் பல கோடி ரூபாய் செலவில் பிற மாநிலங்களில், பிற மொழிகளில், முழுப் பக்க விளம்பரங்களைச் செய்கிறது. இப்படி விளம்பரம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?

100 நாள் என்பது நாட்களின் குறியீடுதானே தவிர இதில் சிறப்பு என்ன இருக்கிறது. இன்னும் 200 நாள், 300 நாள் என்று விளம்பரச் செலவுகள் கூடிக் கொண்டே இருக்குமோ என்று அச்சப்பட வேண்டியிருக்கிறது. வருவாயைப் பெருக்குவதைவிட செலவினங்களைச் சுருக்குவது நல்லது.

ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை

என்ற வள்ளுவரின் வாக்கு இங்கு மதிக்கப்படவில்லை''.

இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x