

உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட ஐடி பிரிவு 66-ஏ கீழ் பதிவான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று அனைத்து மாநில, யூனியன் பிரதேச தலைமைச் செயலர்கள், டிஜிபிகளுக்கு மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் இப்பிரிவில் வழக்கும் பதிவு செய்யக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத் துணைச் செயலர் சைலேந்திர விக்ரம் சிங், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலர்கள், டிஜிபி மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகிகள் ஆகியோருக்கு உத்தரவினை அனுப்பியுள்ளார்.
அதில், "உச்ச நீதிமன்றத்தில் ஸ்ரேயா சிங்கால் என்பவர் மத்திய அரசுக்கு எதிராகத் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் திருத்தம் செய்யக் கோரி வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அடிப்படை உரிமைகளுக்கு விரோதமாக சட்டப் பிரிவு இருப்பதாகக் கூறி ஐடி சட்டத்தில் 66-ஏ பிரிவை ரத்து செய்து 2015-ம் ஆண்டு மார்ச் 24-ம் தேதி தீர்ப்பளித்தது.
இந்நிலையில் ரத்து செய்யப்பட்ட தகவல் தொழில்நுட்பச் சட்டம் 66-ஏ பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள விவரம் உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு வந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட ஐடி பிரிவு 66-ஏ கீழ் காவல் நிலையங்களில் வழக்குகளைப் பதிவு செய்யக்கூடாது. இப்பிரிவில் பதிவான வழக்குகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.