Published : 20 Aug 2021 06:40 AM
Last Updated : 20 Aug 2021 06:40 AM

பைக்கில் பெட்ரோல் திருடியதை தட்டிக் கேட்டவர் கொலை

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ள மேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்(24). கட்டுமான தொழிலாளியான இவர், நாள்தோறும் பணி நிமித்தமாக சென்னைக்கு மின்சார ரயிலில் செல்வதுவழக்கம். அவ்வாறு செல்லும் போது,நந்தியம்பாக்கம் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள அனுமதியில்லாத வாகன நிறுத்துமிடத்தில் தன் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு செல்வது வழக்கம்.

இந்நிலையில், ராஜேஷ், வழக்கம்போல், வாகன நிறுத்துமிடத்தில் நேற்று முன்தினம் தன் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றார்.

தொடர்ந்து, அவர் பணிமுடிந்து இரவு 9.20 மணிக்கு நந்தியம்பாக்கம் ரயில் நிலையம் திரும்பினார். அப்போது, ராஜேஷின் மோட்டார் சைக்கிளில் இருவர் பெட்ரோல் திருடிக் கொண்டிருந்தனர். இதைத் தட்டிக்கேட்ட ராஜேஷை, அந்த நபர்கள்கத்தியால் வெட்டியுள்ளனர்.

தலையில் படுகாயமடைந்தராஜேஷ், ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இச்சூழலில், நேற்று அதிகாலை ராஜேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மீஞ்சூர் போலீஸார், ராஜேஷை கொலை செய்தது தொடர்பாக, மீஞ்சூர் அருகே உள்ள மவுத்தம்பேடுவைச் சேர்ந்த ராஜேஷ்(24), நந்தியம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தமிழ்(24) ஆகியோரைக் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x