Last Updated : 19 Aug, 2021 08:48 PM

 

Published : 19 Aug 2021 08:48 PM
Last Updated : 19 Aug 2021 08:48 PM

நேரடி வகுப்புகள் தொடங்கிய 2 நாளில் சேலம் அரசு செவிலியர் கல்லூரியில் 12 மாணவிகளுக்கு கரோனா

பிரதிநிதித்துவப் படம்.

சேலம்

மருத்துவக் கல்லூரிகள் தொடங்கி 2 நாட்கள் ஆகும் நிலையில், சேலம் அரசு செவிலியர் கல்லூரியில் மாணவிகள் 12 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவர்களுடன் தொடர்பில் இருந்த 176 மாணவிகள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

கரோனா ஊரடங்கு காரணமாக, தமிழகத்தில் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் கடந்த 16-ம் தேதி திறக்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் செயல்பட்டுவரும் அரசு செவிலியர் கல்லூரியிலும் கடந்த 16-ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், செவிலியர் கல்லூரியின் 3-ம் ஆண்டு மாணவிகள், அரசு மருத்துவமனைக்குப் பயிற்சிப் பணிக்கு வந்திருந்த நிலையில், அவர்களில் மாணவி ஒருவருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த மாணவியுடன் தொடர்பில் இருந்த அனைத்து மாணவிகளுக்கும் கரோனா தொற்று கண்டறியும் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் மொத்தம் 10 மாணவிகளுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முதலாமாண்டு, இரண்டாம் ஆண்டு மாணவிகளுக்கும் கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், மேலும் 2 மாணவிகளுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. ஒட்டுமொத்தமாக 12 மாணவிகளுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, செவிலியர் மாணவிகள் 176 பேரும் விடுதியிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் வள்ளி சத்தியமூர்த்தி கூறுகையில், ''கல்லூரிக்கு மாணவிகள் வரும்போதே அவர்கள் அனைவரும் கரோனா நெகட்டிவ் சான்றிதழ் பெற்று வந்த பின்னரே அனுமதிக்கப்பட்டிருந்தனர். தற்போது, மாணவி ஒருவருக்குத் தொற்று அறிகுறி தென்பட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து மாணவிகளுக்கும் தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 12 மாணவிகளைத் தவிர மற்றவர்களுக்கு தொற்று பாதிப்பு இல்லை. எனவே, அவர்கள் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் வகுப்பில் பங்கேற்று வருகின்றனர்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x