Last Updated : 19 Aug, 2021 05:58 PM

 

Published : 19 Aug 2021 05:58 PM
Last Updated : 19 Aug 2021 05:58 PM

சமையல் எண்ணெயில் தண்ணீர் கலந்து மோசடி: இருவர் கைது

புதுச்சேரி

தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான சமையல் எண்ணெயை 4 மெட்ரிக் டன் அளவில் திருடிவிட்டு, அதில் தண்ணீரைக் கலந்து மோசடியில் ஈடுபட்ட லாரி ஓட்டுநர் மற்றும் உதவியாளரை போலீஸார் கைது செய்தனர்.

புதுச்சேரி வில்லியனூர் மணவெளி தண்டுக்கரை வீதியில் தனியார் சமையல் எண்ணெய் ஆலை உள்ளது. இந்நிறுவனம் கடந்த மாத இறுதியில் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடமிருந்து ரூ.42 லட்சம் மதிப்பிலான 28.960 மெட்ரிக் டன் சமையல் எண்ணெயைக் கொள்முதல் செய்துள்ளது.

இதனை செங்கோட்டையைச் சேர்ந்த ஓட்டுநர் கருப்பசாமி மற்றும் உதவியாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் ஹைதராபாத் சென்று, ஒரு டேங்கர் லாரியில் எடுத்துக்கொண்டு, கடந்த 31-ம் தேதி புதுச்சேரி நோக்கிப் புறப்பட்டனர். ஆனால், குறித்த காலத்தில் லாரி வராததால் சந்தேகமடைந்த எண்ணெய் ஆலை நிர்வாகத்தினர் விசாரித்ததில், சென்னை மாதவரம் புறவழிச் சாலையில் ஓட்டுநர் யாருமின்றி லாரி நிற்பது தெரியவந்தது.

இதையடுத்து சரக்கு லாரியை மணவெளியில் உள்ள எண்ணெய் ஆலைக்குக் கொண்டுவந்து சோதனையிட்டதில், அதில் 4 மெட்ரிக் டன் அளவுக்கு எண்ணெய் குறைந்திருப்பதும், மீதமுள்ள எண்ணெயில் தண்ணீர் ஊற்றிக் கலப்படம் செய்யப்பட்டு, பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து எண்ணெய் ஆலை மேலாளர் கேசவய்யா அளித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸார், டேங்கர் லாரி ஓட்டுநர் கருப்பசாமி, உதவியாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் லாரி ஓட்டுநர் கருப்புசாமி மற்றும் உதவியாளர் பாலசுப்பிரமணியம் இருவரும் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இருப்பது வில்லியனூர் போலீஸாருக்குத் தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீஸார் இருவரையும் பிடித்து புதுச்சேரி கொண்டுவந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் திருடிய 4 மெட்ரிக் டன் எண்ணெயை ஆந்திராவில் மூன்று இடங்களில் விற்பனை செய்துள்ளனர். எண்ணெய் குறைந்ததை மறைக்க மீதமுள்ள எண்ணெயில் தண்ணீரை நிரப்பியுள்ளனர். தொடர்ந்து சென்னை வந்த அவர்கள் பயத்தின் காரணமாக மாதவரம் புறவழிச்சாலையில் லாரியை விட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டனர் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஓட்டுநர் கருப்புசாமி, உதவியாளர் பாலசுப்பிரமணி இருவரையும் இன்று (ஆக.19) கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதற்கான நடவடிக்கையையும் மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x