Published : 19 Aug 2021 03:11 AM
Last Updated : 19 Aug 2021 03:11 AM

ஆளுநருடன் ஓபிஎஸ், இபிஎஸ் இன்று சந்திப்பு: திமுக அரசுக்கு எதிராக புகார் அளிக்க உள்ளதாக தகவல்

சட்டப்பேரவையில் வெளிநடப்பு செய்த நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று(ஆக. 19) அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ், பழனிசாமி உள்ளிட்டோர் சந்தித்து புகார் அளிக்க உள்ளனர்.

சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று, திமுக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், சமீபத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்து, வீடு உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை நடத்தினர்.

தொடர்ந்து, முன்னாள் அமைச்சரும், அதிமுக முக்கிய நிர்வாகிகளில் ஒருவருமான எஸ்.பி.வேலுமணியின் வீடு உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோடநாடு விவகாரம்

இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று அதிமுக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், கோடநாடு எஸ்டேட்கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சயான் என்பவரிடம் வாக்குமூலம் பெற்று,முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி மற்றும் அதிமுக பொறுப்பாளர்கள் பெயரை வழக்கில் காவல் துறையினர் சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில், நேற்று சட்டப்பேரவையில் இதுகுறித்து பேச எதிர்க்கட்சித் தலைவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால், அதிமுகவினர் வெளிநடப்பு செய்ததுடன், கலைவாணர் அரங்க வளாகத்திலேயே அரசுக்கு எதிராக சிறிதுநேரம் தர்ணா நடத்தினர்.

இந்நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று காலை 11 மணிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் சந்திக்க உள்ளனர்.

அப்போது, திமுக அரசின் நடவடிக்கைகள் குறித்து அவரிடம் புகார் அளிப்பார்கள் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x