Published : 19 Aug 2021 03:12 AM
Last Updated : 19 Aug 2021 03:12 AM

மத்திய அரசின் ரூ.7 லட்சம் கோடி திட்டங்களால் தமிழகம் பயனடைந்துள்ளது: சேலத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தகவல்

நாமக்கல்லில் பாஜக சார்பில் நடைபெற்ற மக்கள் ஆசி யாத்திரைக் கூட்டத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேசினார்.

சேலம் / நாமக்கல்

மத்திய அரசின் ரூ.7 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் மூலம் தமிழகம் பயனடைந்துள்ளது, என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், சேலத்தில் ‘மக்கள் ஆசி யாத்திரை’யை மேற்கொண்டு, மக்களை சந்தித்தார். அவருக்கு பொதுமக்களும், பாஜக தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதன் பின்னர் அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் செய்த பிரதமர் மோடி, அதில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த 12 பேர், மலைவாழ் மக்கள் சமூகத்தைச் சேர்ந்த 8 பேர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 43 பேரை மத்திய அமைச்சர்களாக்கினார். அரசியல் பின்புலம் இல்லாத சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த 43 அமைச்சர்களையும், அறிமுகம் செய்து வைக்க, நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி காத்திருந்தார். ஆனால், எதிர்க்கட்சிகள் சதி செய்து, கூச்சல் குழப்பம் ஏற்படுத்தி, அறிமுக நிகழ்ச்சியை தடுத்துவிட்டனர்.

மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கூறி, அவர்களின் ஆசியைப் பெற யாத்திரை நடத்தப்படுகிறது. மத்திய அரசின் திட்டங்களால் அதிகம் பயனடைந்த மாநிலமாக தமிழகம் உள்ளது.

மத்திய அரசு அறிவித்த 2 ராணுவ தளவாட உற்பத்தி தொழில் வழித்தடங்களில் ஒன்று உத்தரப் பிரதேசத்துக்கும் மற்றொன்று தமிழகத்துக்கும் ஒதுக்கப்பட்டது. மீன்வளத்துறை சார்பில் சென்னையில், சிறப்பு பொருளாதார கடற்பாசி பூங்கா ரூ.3 லட்சம் கோடி மதிப்பில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீன்வளத்துறை மேம்பாட்டுக்காக ரூ.20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக மத்திய அரசின் ரூ.7 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் மூலம் தமிழகம் பயனடைந்துள்ளது. 2014-க்கு பிறகு தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மீனவர் கூட தாக்கப்படவில்லை. மீனவர் பிரச்சினை வரும் போது இலங்கை அரசுடன் பேசி தீர்வு காணப்பட்டு வருகிறது. மீனவர் நலனுக்காக மத்திய அரசு தொடர்ந்து செயல்படும்.

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி- யின் கீழ் கொண்டு வர பெரும்பாலான மாநிலங்கள் தயாராகயில்லை. தமிழகத்தில் தேர்தலின் போது அளித்த வாக்குறுதியின்படி, திமுக நடந்து கொள்ளவில்லை. பெட்ரோலுக்கு ரூ.5 குறைப்போம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு ரூ.3 மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது. டீசல் விலை குறைக்கப்பட வில்லை. மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை, பயிர்க்கடன், கல்விக்கடன் உள்ளிட்ட வாக்குறுதிகளை செயல்படுத்துவதற்கான விவரங்கள் நிதிநிலை அறிக்கையில் இல்லை. மொத்தத்தில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாகவே திமுக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, கயிறு வாரிய முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

முன்னதாக நாமக்கல்லில் பாஜக சார்பில் மக்கள் ஆசி யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய தகவல் ஒளிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் தனது சொந்த கிராமமான நாமக்கல் மாவட்டம் கோனூரில் வசிக்கும் பெற்றோர் லோகநாதன், மருதாயம்மாளிடம் வாழ்த்துப் பெற்றார்.நிகழ்ச்சியில் பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் சி. பி. ராதாகிருஷ்ணன், பாஜக மாநிலத் துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, முன்னாள் எம்பி கே.பி.ராமலிங்கம், பாஜக மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x