Published : 18 Aug 2021 07:18 PM
Last Updated : 18 Aug 2021 07:18 PM

திருப்பூரில் 5 கிலோ ஃபார்மலின் மீன்கள் பறிமுதல்; புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்பதால் அதிர்ச்சி

திருப்பூரில் இன்று பறிமுதல் செய்யப்பட்ட மீன்களை பினாயில் ஊற்றி அழிக்கும் அலுவலர்கள்.

திருப்பூர்

புற்றுநோய்க்கு வழிவகுக்கும் வகையில் ஃபார்மலின் கலக்கப்பட்ட மீன்களை, திருப்பூரில் 5 கிலோ பறிமுதல் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் நகரப் பகுதியில் மீன்கள் கெடாமல் இருக்க, ஃபார்மலின் கலக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறைக்குப் புகார் வந்தது. இதையடுத்து, திருப்பூர் பெருமாநல்லூர் சாலை மற்றும் பல்லடம் சாலையில் உள்ள மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு மற்றும் மீனவர் நலத்துறை அலுவலர்கள் இன்று அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது பெருமாநல்லூர் சாலையில் உள்ள ஒரு கடையில், ஃபார்மலின் கலந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 5 கிலோ மீன் கண்டறியப்பட்டது. தென்னம்பாளையம் மீன் சந்தையில், பயன்படுத்தத் தகுதியற்ற நிலையில் இருந்த 20 கிலோ மீன்கள் கண்டறியப்பட்டு ஃபினாயில் ஊற்றி அழிக்கப்பட்டன.

கெட்டுப்போன மற்றும் பார்மலின் கலந்த மீன்களை விற்ற 5 மீன் விற்பனைக் கடைகளுக்கு, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம் 2006-ன்கீழ் நோட்டீஸ் வழங்கினர். மேலும் இது போன்ற செயலில் தொடர்ந்து ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை, மீன்வளத்துறை ஆய்வாளர் அருள்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள எச்சரித்தனர்.

இதுதொடர்பாக மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை ’இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறும்போது, ராமநாதபுரம், தூத்துக்குடி போன்ற பகுதியில் இருந்து திருப்பூருக்கு அதிகளவில் மீன் வரத்து உள்ளது. மீன்கள் கெடாமல் இருக்கவே, ஃபார்மலின் தெளிக்கப்படுகிறது. தற்போது கண்டுபிடிக்கப்பட்ட கடையில் ஃபார்மலின், மீன் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள ஐஸ்கட்டியின் மீது தெளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இதுபோன்று ஃபார்மலின் தெளிக்கப்பட்ட அல்லது பார்மலினில் ஊற வைக்கப்பட்ட மீன்களைச் சாப்பிடும்போது மனிதர்களுக்குப் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும்.

வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, தலைவலி, வயிற்றெரிச்சல், வயிற்றுப் பொருமல் மற்றும் உச்சகட்டமாகப் புற்றுநோய்க்கு வழிவகுத்துவிடும். இது உயிருக்குப் பேராபத்தான விஷயம். ஃபார்மலின் பயன்படுத்திய மீன்கள் எது என்பதை பொதுமக்கள் கண்டறிய முடியாது. மீன் வாங்கும்போது

மீனின் செவிள், வாயைத் திறந்து பார்க்கும்போது இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தால் புதிய மீன்களாக இருக்கும். அதேசமயம் கருப்பு மற்றும் மிகவும் செந்நிறத்தில் இருந்தால் அவை பழைய மீன்களாக இருக்கும். அவற்றை புறந்தள்ளிவிடலாம் என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x