Published : 18 Aug 2021 04:56 PM
Last Updated : 18 Aug 2021 04:56 PM

மருத்துவக் கல்வியில் ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: 25-ம் தேதிக்கு தீர்ப்பு தள்ளிவைப்பு

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்

சென்னை

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம், ஆகஸ்ட் 25-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க கோரி, திமுக எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு பெற உரிமை உள்ளதாகவும், இந்த இட ஒதுக்கீட்டை எப்படி வழங்குவது என்பது குறித்து முடிவு செய்ய மத்திய - மாநில சுகாதார துறை செயலாளர்கள், மருத்துவக் கவுன்சில், பல் மருத்துவக் கவுன்சில் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என, கடந்த ஆண்டு ஜூலை மாதம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, திமுக சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. நேற்று, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது குறித்து, மத்திய அரசுத்தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று (ஆக. 18) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நடராஜ், பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்காக இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, இட ஒதுக்கீடு வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

இது சம்பந்தமாக அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டால், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும், பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டுக்கும், இந்த வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும், உயர் நீதிமன்றத்தின் உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார்.

தொடர்ந்து, திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் மத்திய அரசு இட ஒதுக்கீடு அமல்படுத்த முடியாது எனவும், 69 சதவீதவிட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மேலும், நீண்ட போராட்டங்களுக்குப் பின் கிடைத்த இடஒதுக்கீட்டை பறிக்கக் கூடாது எனவும் வாதிட்டார். அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை ஆகஸ்ட் 25-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x