Published : 18 Aug 2021 11:49 AM
Last Updated : 18 Aug 2021 11:49 AM

அதிமுகவினர் மீது பொய் வழக்குப் போட்டு திமுக அரசு அச்சுறுத்துகிறது: ஓபிஎஸ் குற்றச்சாட்டு

அதிமுகவினர் மீது பொய் வழக்குப் போட்டு திமுக அரசு அச்சுறுத்துவதாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு தெரிவித்தார்.

இன்று (ஆக. 18) மூன்றாவது நாளாக பட்ஜெட் மீதான பொது விவாதத்துக்காக கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூடியது.

அதிமுகவினர் சட்டப்பேரவைக்கு கருப்பு பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர். அப்போது, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச அனுமதி கேட்டார். அதற்கு சபாநாயகர் மு.அப்பாவு அனுமதி அளித்ததும், "கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை மறு விசாரணை செய்வது எதற்கு?" என, எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி பேசினார்.

அதற்கு, முதல்வர் ஸ்டாலின் பதிலளிக்கையில், "இந்த விவகாரம் விசாரணையில் இருக்கிறது. 'எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்பது போல அதிமுகவினர் செயல்படுகின்றனர். இந்த வழக்கில் எந்த அரசியல் தலையீடும் இல்லை. நியாயமான விசாரணை நடத்தப்பட்டு, உண்மை வெளிக்கொண்டு வரப்படும். நீதிமன்ற அனுமதியுடன் தான் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது" என பேசினார்.

இதையடுத்து, அதிமுகவினர் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். பின்னர், பொய் வழக்கு போடும் திமுக அரசை கண்டிக்கிறோம் என்று எழுதப்பட்ட வாசகங்களுடன் வெளிநடப்பு செய்த அதிமுகவினர், கலைவாணர் அரங்குக்க்கு வெளியே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது, ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

"நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை பொய்யுரைகளாக தமிழக மக்களிடம் சொல்லி, அவர்களை நம்ப வைத்து அதன் மூலம் வெற்றி பெற்றுள்ளது திமுக அரசு. மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மக்களுடைய பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணாமல், நாட்டின் பொருளாதாரத்தை வளர்த்தெடுப்பதில் சிந்திக்காமலும் செயல்படாமலும், ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளை பொய் வழக்குகளால், தன் அதிகார பலத்தால் நசுக்க வேண்டும் என்ற தவறான கொள்கையை திமுக அரசு கையிலெடுத்துள்ளது.

இந்த அராஜக செயலை கண்டிக்கும் வகையில், அதிமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவரும் குரல் கொடுத்து வருகின்றார். அவருக்கு உரிய வாய்ப்பு தராமல், என்ன சொல்கிறார் என்பதை கேட்காமல் அடுத்த நடவடிக்கைகளுக்கு கொண்டு போகும் சூழலில்தான் சட்டப்பேரவை நடைபெறுகிறது.

தொடர்ந்து ஏதாவது குற்றச்சாட்டை, பொய் வழக்குகளை, சட்டத்தின் மூலம் கொண்டு வந்து எங்களை அச்சுறுத்தும் வகையில் திமுக அரசு செயல்படுகிறது. அதனை எதிர்த்து குரல் கொடுக்கிறோம். அதிமுகவை செயல்பட விடாமல் நசுக்கும் தவறான கண்ணோட்டத்தில் திமுகவினர் செயல்படுகின்றனர்.

அதிமுகவை பொறுத்தவரை எந்தவிதமான வழக்குகளுக்கும் அஞ்சமாட்டோம். சட்டப்படி எதிர்கொள்வோம். வெற்றி பெறுவோம். திமுக தொடுக்கும் அத்தனை வழக்குகளும் பொய் வழக்குகள் என்பது மக்களுக்குத் தெரிகிறது.

இன்றும் நாளையும் அதிமுக முழுமையாக சட்டப்பேரவை நிகழ்வுகளை புறக்கணிக்கும். இதன் மூலம் ஜனநாயக கடமையை ஆற்றுகிறோம். திமுகவின் அராஜக செயலையும் வன்முறையையும் எடுத்துரைக்கும் வகையில் புறக்கணிக்கிறோம்".

இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x