

சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, மீஞ்சூர் உள்ளிட்ட ஊர்களுக்கு தினமும் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு, 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர்.
சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களை இயக்குவதற்காக இரண்டு ரயில் பாதைகளும், விரைவு ரயில்களை இயக்குவதற்காக இரண்டு ரயில் பாதைகளும் உள்ளன.
இந்நிலையில், அண்மைக் காலமாக விரைவு ரயில்கள் சாதாரண ரயில்கள் இயக்கப்படும் பாதையில் இயக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பயணிகள் கூறும்போது, ``சென்னையில் இருந்து அரக்கோணத்துக்கு இயக்கப்படும் விரைவு ரயில்கள், பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் இருந்து விரைவுப் பாதையில் இயக்கப்படும். ஆனால் தற்போது இந்த ரயில்கள் வில்லிவாக்கம் ரயில் நிலையம் வரை சாதாரண ரயில்கள் இயக்கப்படும் பாதையில் மெதுவாக இயக்கப்படுகின்றன.
அதேபோல, மறுமார்க்கத்தில் அரக்கோணத்தில் இருந்து இயக்கப்படும் விரைவு மின்சார ரயில்களும், திருவள்ளூர், நெமிலிச்சேரி உள்ளிட்ட ரயில் நிலையங்கள் இடையே வரும்போது சாதாரண ரயில் பாதையில் இயக்கப்படுகின்றன.
ஓர் இடத்துக்கு விரைவாக செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்ட இந்த விரைவு ரயில் சேவை, அந்த நோக்கத்தையே சிதைக்கும் வகையில் தாமதமாகிறது.எனவே, விரைவு மின்சார ரயில்களை, விரைவு ரயில் பாதையில் மட்டுமே இயக்க வேண்டும்'' என்றனர்.