Last Updated : 17 Aug, 2021 05:14 PM

 

Published : 17 Aug 2021 05:14 PM
Last Updated : 17 Aug 2021 05:14 PM

எழுவர் விடுதலையில் தலையிட முடியாது: உயர் நீதிமன்றம்

மதுரை

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதிகள் 7 பேர் விடுதலை விவகாரத்தில் நீதிமன்றம் எந்த முடிவும் எடுக்க முடியாது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மதுரை மத்தியச் சிறையில் 29 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.

இவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

''ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 29 ஆண்டுகளாக சிறையில் உள்ளேன். 14 ஆண்டுகள், 20 ஆண்டுகள் சிறையில் இருந்த பலர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் என்னை விடுதலை செய்யவில்லை. தொடர் சிறை வாசம் காரணமாக மன உளைச்சல் ஏற்படுவதுடன் உடல் நலனும் பாதிக்கப்பட்டு வருகிறது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாகத் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. இந்தத் தீர்மானத்தின் மீது ஆளுநர் விரைவில் முடிவெடுக்க வேண்டும் என மனு அளித்தும் பலனில்லை.

தமிழகச் சிறைகளிலுள்ள 1,600 ஆயுள் தண்டனைக் கைதிகளின் முன் விடுதலை தொடர்பான மனுக்கள் பரிசீலிக்கப்பட்டுள்ள நிலையில் எங்கள் மனுக்கள் பரிசீலனைக்கு எடுக்கப்படாமல் உள்ளன. எனவே, 7 பேர் விடுதலை தொடர்பாக சட்டப்பேரவைத் தீர்மானத்தின் மீது விரைவில் முடிவெடுக்க உத்தரவிட வேண்டும்''.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் பாரதிதாசன், நிஷாபானு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ''மனுதாரர் சம்பந்தப்பட்ட வழக்கில் சிறையில் இருக்கும் நளினி, முன்விடுதலை கோரி தாக்கல் செய்த வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஏழு பேர் விடுதலை விவகாரம் குடியரசுத் தலைவரின் முடிவுக்காக, தற்போது காத்திருப்பில் உள்ளது'' என்று தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், ''மனுதாரர் கோரிக்கை தொடர்பாக நீதிமன்றம் எந்த முடிவும் எடுக்க முடியாது. அவரது கோரிக்கை தொடர்பாக ஏதாவது முடிவெடுக்கப்படும் நிலையில் அந்த முடிவின் மீது மனுதாரர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்'' என்று கூறி விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x