Published : 17 Aug 2021 03:07 PM
Last Updated : 17 Aug 2021 03:07 PM

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை எப்போது?- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்

சென்னை

புதிதாகத் தொடங்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது என்ற கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக தலைமையிலான அரசின் சார்பில் பொது நிதிநிலை அறிக்கை கடந்த 13-ம் தேதி அன்று தாக்கல் செய்யப்பட்டது. இதை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து 14-ம் தேதி, சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அத்துறையின் நிதிநிலை அறிக்கையைத் தனியாகத் தாக்கல் செய்தார்

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பட்ஜெட் அறிவிப்பு மீதான பொது விவாதம், கலைவாணர் அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா இன்று (ஆக.17) பேசும்போது, ''புதிதாகத் தொடங்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடங்களை உருவாக்க வேண்டும். கல்லூரி மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு தொடங்குமா?'' என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ''கடந்த 3 மாதங்களில் 11 மருத்துவக் கல்லூரிகளின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து வருகிறோம். இது தொடர்பாக மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருக்கிறோம்.

ஒரு கல்லூரிக்கு 150 மாணவர்கள் என்ற அடிப்படையில் இந்த ஆண்டே 1650 மாணவர்களின் சேர்க்கைக்கு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை இந்த ஆண்டே தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம்'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x