Published : 17 Aug 2021 02:24 PM
Last Updated : 17 Aug 2021 02:24 PM

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கனமழை வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று (ஆக. 17) வெளியிட்ட அறிவிப்பு:

"வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் இன்று திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், திருப்பத்தூர், நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும் குறைந்தபட்ச வெபப்நிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழை அளவு (சென்டிமீட்டரில்):

சோழவரம் (திருவள்ளூர்), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்) தலா 6, ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்), ஊத்துக்குளி (திருப்பூர்) தலா 5, டிஜிபி அலுவலகம் (சென்னை), புழல் (திருவள்ளூர்), விரகனூர் அணைக்கட்டு (மதுரை) தலா 4, தரமணி (சென்னை), பெரம்பூர் (சென்னை), திருமயம் (புதுக்கோட்டை), அம்பத்தூர் (திருவள்ளூர்), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), ஆவுடையார்கோவில் (புதுக்கோட்டை), புதுக்கோட்டை, சிட்டம்பட்டி (மதுரை), அரிமளம் (புதுக்கோட்டை), மேலூர் (மதுரை) தலா 3.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்கக்கடல் பகுதிகள்:

17.08.2021, 18.08.2021: வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

17.08.2021, 18.08.2021: மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிகு 35 - 45 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அரபிக்கடல் பகுதிகள்:

17.08.2021, 19.08.2021: தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்திலுடம் இடையிடையே 70 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x