Published : 17 Aug 2021 03:15 AM
Last Updated : 17 Aug 2021 03:15 AM

முறையாக பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே கோயில்களில் அர்ச்சகர்களாக நியமனம்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை

முறையாக பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவதாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 38 கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக கடந்த ஜூலை 6-ம் தேதி விண்ணப்பங்களை வரவேற்று அறநிலையத் துறை சார்பில் விளம்பரம் வெளியிடப்பட்டது. இதில் அர்ச்சகர்களுக்கான ஓராண்டு சான்றிதழ் படிப்பை முடித்தவர்களும் அர்ச்சகர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பை ரத்து செய்து, ஆகம விதிகளின்படி அர்ச்சகர்களை நியமிக்க உத்தரவிடக் கோரி, அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தின் பொதுச்செயலர் பி.எஸ்.ஆர் முத்துக்குமார் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், ஆகம விதிகளைப் பின்பற்றியே அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக இந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது என்றும், ஆகமவிதிப்படி முறையான பயிற்சி பெறாதவர்களை கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிப்பது சட்டவிரோதமானது என்பதால் 38 கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும், என கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், அர்ச்சகர்கள் பணி நியமனம் தொடர்பாக தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி அனிதா சுமந்த் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் பி.வள்ளியப்பன், பி.ஐயப்பன் ஆகியோர் ஆஜராகி வாதி்ட்டனர். அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், இதே கோரிக்கை தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் நிலுவையில் உள்ளதால் இந்த வழக்கை முதன்மை அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, இதுபோல நியமிக்கப்படும் அர்ச்சகர்களுக்கு முறையாக பயிற்சி அளிக்கப்படுகிறதா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர், முறையாக பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவதாக தெரிவித்தார். அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்ற பதிவுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x