Published : 16 Aug 2021 08:39 PM
Last Updated : 16 Aug 2021 08:39 PM

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் ஸ்மார்ட் விஷன் கண்ணாடிகள் அறிமுகம்

மதுரை 

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் ‘ஸ்மார்ட் விஷன் கண்ணாடி’யை (smart vsion spectacles) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பார்வை சவால் கொண்டவர்கள் தங்கள் முன் உள்ள நபர்களையும், சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதையும் அறிந்து கொள்ளவும், எளிதாக படிக்கவும் இந்தக் கண்ணாடி உதவும். இந்தியாவிலேயே முதல்முறையாக இவ்வகை கண்ணாடி அறிமுகமாகியுள்ளது.

இதுகுறித்து குறைந்த பார்வை சேவை பிரிவு தலைமை மருத்துவர் பி.விஜயலெட்சுமி செய்தியாளர்களிடம் கூறியதாவது;

சர்வதேச அளவில் பார்வை குறைபாடு உள்ளவர்கள் எழுத்துக்களைப் படிக்க பல்வேறு நவீன தொழில்நுட்பம் கொண்ட சாதனங்கள் உள்ளன. அதில் முற்றிலும் மாறுபட்ட பார்வை குறைபாடுள்ளவர்கள் எளிதாக படிக்கவும், தங்கள் முன் உள்ள நபர்களை அறிந்து கொள்ளவும் அரவிந்த் கண் மருத்துவமனையும், பெங்களூரு எஸ்எச்ஜி டெக்னாலஜியும் இணைந்து ஸ்மார்ட் விஷன் கண்ணாடி (smart vision spectacles) வடிவமைத்துள்ளது.

பார்வை குறைபாடுள்ளவர்கள் கல்வி மற்றும் அன்றாட வாழ்க்கைக்கு இதனைப் பயன்படுத்தலாம். இதனை சாதாரண கண் கண்ணாடி போல் பார்வையற்றவர்கள் முகத்தில் பொருத்திக் கொள்ள வேண்டும். ப்ளாஷ் ஒளியுடன் கூடிய கேமரா மூலம் சுற்றுப்புறத்தில் என்ன இருக்கிறது, என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

நடப்பதற்கு இந்த சாதனத்தை உதவியாகப் பயன்படுத்தலாம். அது எந்தத் தடையாக இருந்தாலும், மனித உருவங்கள், பொருட்கள் போன்றவை முகத்திற்கு 2 மீட்டர் தூரம் வரை தெரிந்து கொள்ளலாம்.

முன் அமர்ந்து இருக்கும் நபரை ஒரு முறை இந்த சாதனம் மூலம் புகைப்படம் எடுத்துக் கொண்டால் அடுத்த முறை அவரது பெயர் உள்ளிட்ட விவரத்தை நமக்கு இந்த கருவி அவர் வந்தவுடன் தெரிவிக்கும்.

ப்ளாஷ் ஒளி இருப்பதால் இரவில் கூட இந்த சாதனத்தைப் பயன்படுத்தி பகலைப்போல் படிக்கலாம். கண்ணாடி பிரேமின் இடது பக்கத்தில் இணைக்கப்பட்ட பொத்தான்களை அழுத்துவதன் மூலம் அதன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தலாம். இந்தக் கருவியைக் கொண்டு 73 மொழிகளைப் படிக்க முடியும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பேட்டியின் போது அவருடன் பார்வை மறுவாழ்வு நிபுணர் ப்ளோரா ஜெயசீலி உடனிருந்தார். பரிசோதனை அடிப்படையில் ஏழை மாணவர், பணியாளர் உள்பட 3 பேருக்கு ரோட்டரி கிளப் சென்னை சார்பில் இலவசமாக இந்த சாதனம் வழங்கப்பட்டுள்ளது.

விரைவில் இதை ரோட்டரி சங்கம் 300 பேருக்கு இலவசமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x