

கோயம்புத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கலப்பட டீசல் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் 26,400 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்துத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
''கோயம்புத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான சேலம், சங்ககிரி, நாமக்கல், திருச்செங்கோடு, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் கலப்பட டீசல் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த தகவலின் பேரில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல்துறை கூடுதல் இயக்குநர் ஆபாஸ்குமார் உத்தரவுப்படி, காவல் கண்காணிப்பாளர்கள் ஸ்டாலின், பாஸ்கர் ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தலைமையில் பல குழுக்களாகப் பிரிந்து, மேற்படி பகுதிகளில் கலப்பட டீசல் வாகன சோதனை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் கலப்பட டீசல் சம்பந்தமாக மொத்தம் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 26,400 லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல் செய்யப்பட்டு அந்த டீசல் ஏற்றி வந்த 05 டேங்கர் லாரிகள் மற்றும் 3 Tata Ace வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் கடத்தல் செயலில் ஈடுபட்ட 10 நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அதில் தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபடும் நபர்கள் மீது கள்ள சந்தை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் 13.08.21ஆம் தேதி சேலம் மாவட்டம் சங்ககிரி குப்பனூர் பிரிவு சாலையில் வாகனத் தணிக்கையின்போது அதிகாலை சுமார் 3 மணியளவில் கோவையில் இருந்து சேலம் நோக்கி வந்த TN-49-AM 9978 என்ற எண்ணுள்ள டேங்கர் லாரியில் சுமார் 4000 லிட்டர் அளவுள்ள கலப்பட டீசல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது, ஓட்டுநர் மதியழகன் (47) த.பெ.ராஜு மற்றும் க்ளீனர் செல்வம் (26) த.பெ. சமுத்திரம் மற்றும் உரிமையாளர் இன்பராஜ் திருப்பூர் ஆகியோர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
அதேபோல் பொள்ளாச்சி கே.ஜி.சாவடி எட்டிமடை கே.பி.எஸ் குடோன் அருகில் 12.08.21 அன்று வாகனத் தணிக்கையில் 4000 லிட்டர் ஏற்றி வந்த லாரி TN 88 F 8767 மற்றும் TN 38 U 3594 என்ற TATA ACE வாகனங்களை ஓட்டி வந்த ஓட்டுநர்கள் சபாபதி மற்றும் செல்வ கருப்பையா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் சேலம் கேது நாயக்கபன்பட்டியில் கடந்த 05.08.21 ம் தேதி வாகனத் தணிக்கையில் 1,350 லிட்டர் ஏற்றி வந்த லாரி TN 39 CD 2323 மற்றும் Steel barrel பறிமுதல் செய்யப்பட்டு வெங்கடேசன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல் சேலம் சங்ககிரி முதல் எடப்பாடி ரோடு வாரி பேக்கரி முன்பு 06.08.21 வாகனத் தணிக்கையில் 17,050 லிட்டர் ஏற்றி வந்த லாரிகள் TN 34 L 0378, KA 01 AE 7577 மற்றும் TN 29 BD 1393 என்ற TATA ACE வாகன ஓட்டுனர்கள் கலப்பட டீசல் உரிமையாளர்களான ஆரோக்கியராஜ், கவுதம், சங்கர் மற்றும் பழனிசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் நாமக்கல் தொட்டிப்பட்டியில் 25.06.21 அன்று 7,000 லிட்டர் கலப்பட டீசலை ஏற்றி வந்த லாரி TN 18 S 3528 வாகன ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் ஆனந்தராஜ், தமிழ்ராஜ் ஆகியோர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல் நாமக்கல் முத்தாலப்பட்டி பைபாஸ் ரோட்டில் வாகனத் தணிக்கையில் 01.08.21 அன்று1000 லிட்டர் கலப்பட டீசல் ஏற்றி வந்த லாரி TN 01 AT 4223 ன் வாகன ஓட்டுநர் ஈஸ்வரன் கைது செய்யப்பட்டார். மேலும் சேலம் தேசிய நெடுஞ்சாலை பச்சபாளி ரோட்டில் 01.08.2021 அன்று 350 லிட்டர் கலப்பட டீசல் டேங்கரில் வைத்து அரசு அனுமதி இல்லாமல் கள்ளத்தனமாக அங்கு செல்லும் வாகனங்களுக்குக் குறைந்த விலையில் விற்பனை செய்ய வந்த டேங்கர் உரிமையாளர் முருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து கலப்பட டீசல் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்க கடுமையான நடவடிக்கை எடுக்க தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது''.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.