Last Updated : 16 Aug, 2021 07:27 PM

 

Published : 16 Aug 2021 07:27 PM
Last Updated : 16 Aug 2021 07:27 PM

பிரியாணி வாங்கிக் கொடுத்து நிலம் அபகரிப்பு: ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி தர்ணா

நிலத்தை மீட்டுத் தரக்கோரி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட வசந்தா

திருப்பத்தூர்

பிரியாணி வாங்கிக் கொடுத்து 2 சென்ட் நிலத்தை அபகரித்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மடவாளம் அம்பேத்கர் புரத்தைச் சேர்ந்தவர் வசந்தா(75). இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு இன்று காலை வந்தார். நில அபகரிப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து புகார் மனு அளிக்க வேண்டும் என அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களிடம் கூறினார்.

கரோனா தடுப்பு காரணமாக ஆட்சியரை நேரில் சந்தித்து மனு வழங்க முடியாது என்றும் அங்குள்ள புகார் பெட்டியில் மனுவை போட்டுவிட்டுச் செல்லும்படியும் காவலர்கள் கூறினர்.

இதை ஏற்காத மூதாட்டி வசந்தா ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து, அங்கு வந்த ஆட்சியர் அலுவலக அதிகாரிகளிடம் மூதாட்டி வசந்தா மனு ஒன்றை அளித்தார்.

அம்மனுவில், ‘‘மடவாளம் பகுதியில் நான் குடிசை வீட்டில் வசித்து வருகிறேன். என் கணவர் கண்ணாயிரம் சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்து விட்டார். எனக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் திருமணம் முடிந்து கணவருடன் வசித்து வருகின்றனர். நான் மட்டும் மடவாளத்தில் குடிசை வீட்டில் தனியாக வசித்து வருகிறேன். இந்நிலையில், என் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ரமேஷ் (45) என்பவர், எனக்கு அவ்வப்போது சில உதவிகளை செய்து வந்தார்.

மேலும், எனக்கு அடிக்கடி பிரியாணி வாங்கிக் கொடுப்பார். ஆதரவற்ற நிலையில் இருந்த எனக்கு, ரமேஷ் செய்த சிறு, சிறு உதவிகள் பெரும் பயனாக இருந்தன. இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு என் வீட்டுக்கு அருகாமையில் உள்ள 2 சென்ட் நிலத்தில், ரமேஷ் சுற்றுச்சுவர் எழுப்பி அந்த இடத்தை ஆக்கிரமித்தார்.

இதையறிந்த நான் என் மகள் ஜெயந்தியுடன் சென்று ரமேஷிடம் கேட்டபோது, அந்த இடம் தனக்குச் சொந்தமானது எனக்கூறிய ரமேஷ் கொலை மிரட்டல் விடுக்கிறார். இதுகுறித்துத் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் பல முறை புகார் அளித்தும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர் என்று கூறப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து, வசந்தாவிடம் இருந்து மனுவைப் பெற்ற ஆட்சியர் அலுவலக அதிகாரிகள், இது தொடர்பாக விசாரணை நடத்தி நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையேற்று மூதாட்டி வசந்தா அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x