Last Updated : 16 Aug, 2021 02:43 PM

 

Published : 16 Aug 2021 02:43 PM
Last Updated : 16 Aug 2021 02:43 PM

சிறப்பு டிஜிபி மீதான பாலியல் புகார் வழக்கு: ஆக.23-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தொடரப்பட்ட இவ்வழக்கை வருகின்ற 23-ம் தேதிக்கு நடுவர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

எஸ்.பி.யாக உள்ள பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர், கடந்த ஏப்ரல் மாதம் அப்போதைய முதல்வரின் பாதுகாப்புப் பணியில் இருந்துள்ளார். அவரது மேலதிகாரியான சிறப்பு டிஜிபி அவரது மாவட்டத்துக்கு வந்தபோது மரியாதை நிமித்தமாக அவரைச் சந்தித்துள்ளார். அப்போது அந்த பெண் எஸ்.பியை காரில் ஏறச்சொன்ன சிறப்பு டிஜிபி, பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதைத் தொடர்ந்து, சிறப்பு டிஜிபி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது சிபிசிஐடி போலீஸார் 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையே, கடந்த ஏப்ரல் 23-ம் தேதி விழுப்புரம் குற்றவியல் நடுவர் மன்றம் எண் 2-ல், நடுவர் முன்பு அந்தப் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

இந்நிலையில், சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமையிலான போலீஸார், கடந்த 29-ம் தேதி விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நடுவர் மன்றத்தில் சுமார் 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், இவ்வழக்கு கடந்த 9-ம் தேதி விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி, எஸ்.பி. கண்ணன் ஆகியோர் ஆஜராகினர். அவர்களுக்கு நடுவர் மன்றம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கி, இன்று (ஆக. 16) ஒத்திவைத்தது.

இடைநீக்கம் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி கடந்த 13-ம் தேதி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அம்மனுவில், அவர் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தொடர்ச்சியான உத்தரவுகள், நியாயமான விசாரணைக்கான வாய்ப்புகளைத் தப்பெண்ணப்படுத்தியுள்ளதாகக் கூறினார்.

தமிழகத்தின் சிறப்பு இயக்குநர் ஜெனரலாக இருந்தவர், தனது வழக்கை ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள சிறப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு அல்லது தமிழகத்துக்கு வெளியே உள்ள வேறு எந்த திறமையான நீதிமன்றத்துகும் மாற்ற அம்மனுவில் தெரிவித்திருந்தார். இருப்பினும், தமிழக அரசு வழக்கறிஞர்கள் அறிவுறுத்தல்களைப் பெற கால அவகாசம் கோரினர். இந்த வழக்கை நீதிமன்றம் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இதனை இன்று (ஆக.16) விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்கறிஞர் வைத்தியநாதன் தெரிவித்தார். இதற்கிடையே, சிறப்பு டிஜிபி மற்றும் எஸ்.பி. ஆகியோர் ஆஜராவதிலிருந்து விலக்கு கேட்டு மனுத்தாக்கல் செய்தனர். இதையடுத்து, இவ்வழக்கை வருகின்ற 23-ம் தேதிக்கு குற்றவியல் நடுவர் மன்ற நடுவர் கோபிநாதன் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x