Last Updated : 15 Aug, 2021 08:29 PM

 

Published : 15 Aug 2021 08:29 PM
Last Updated : 15 Aug 2021 08:29 PM

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 450 இடங்களைக் கைப்பற்றும்: அண்ணாமலை நம்பிக்கை

வேலூரில் உள்ள சிப்பாய் புரட்சி நினைவு தூணுக்கு பாஜக சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை மலர் வளையம் வைத்து இன்று மரியாதை செலுத்தினார்.

வேலூர்

2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 450 இடங்களை கைப்பற்றும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார்.

வேலூர் மாவட்ட பாஜக சார்பில் 75-வது சுதந்திர தின விழா வேலூரில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வேலூர் ரங்காபுரத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து, வேலூர் மக்கான் சிக்னல் அருகேயுள்ள சிப்பாய் புரட்சி நினைவு தூண்ணுக்கு பாஜக சார்பில் அண்ணாமலை மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து, பாஜக செயல் வீரர்கள் ஆலோசனைக்கூட்டம் வேலூரில் இன்று நடைபெற்றது.

இதில், அண்ணாமலை பேசியதாவது:

‘‘பாஜக கொண்டு வந்த திட்டங்களுக்கு தமிழக அரசு வாக்காளத்து வாங்குகிறது. பிரதமர் மோடி தமிழகத்துக்கு கொண்டு வந்த அனைத்து திட்டங்களும் சிறப்பான திட்டங்களாகும். இந்தத் திட்டங்களை கடந்த 10 ஆண்டுகளாக கேலி பேசி வந்த திமுக அதையே தற்போது சட்டப்பேரவையில் கொண்டு வந்துள்ளனர்.

அன்று கருப்புக்கொடி காட்டி ‘கோ பேக்’ மோடி என முழுக்கமிட்டவர்கள் இன்று பாஜக கொண்டு வந்தது நல்ல திட்டங்கள் என்றும், இதன் மூலம் ரூ.2 ஆயிரம் கோடி முதலீடு வந்துள்ளதாக தமிழக தொழில் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 450 இடங்களில் வெற்றிப்பெற்று மீண்டும் மோடி பிரதமராக பொறுப்பேற்பார்.

காங்கிரஸ் இல்லாத பாரதம் உருவாக்கப்படும். காங்கிரஸ் கட்சியில் 23 தலைவர்கள் உள்ளனர். அக்கட்சியில் செயல் தலைவர் மட்டுமே உள்ளனர். காங்கிரஸ் கட்சி தேர்தல் நடத்திய பல ஆண்டுகள் ஆகிவிட்டது. செயல் தலைவரை வைத்தே கட்சியை வழி நடத்தி வருகின்றனர்.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மகாத்மா காந்தி காங்கிரஸ் கட்சியை கலைத்து விட வேண்டும் எனக்கூறினார். அவரது சொல் தற்போது நிறைவேறிக்கொண்டுள்ளது. இந்தியாவிலேயே குழப்பம் நிறைந்த கட்சி காங்கிரஸ் கட்சி மட்டும் தான்.

2024-ம் ஆண்டுக்குள் பிரதமர் மோடி கொண்டு வந்த அனைத்து திட்டங்களும் முழுமை அடையும்’’.இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x