2 மணி நேரம் காக்கவைக்கப்பட்டு தியாகிகள் கவுரவிப்பு : ஓரே இடத்தில் அமர்ந்திருந்ததால் முதியவர்கள் அவதி  

ஆட்சியரின் வருகைக்காக 2 மணி நேரம் காத்திருந்த தியாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்.
ஆட்சியரின் வருகைக்காக 2 மணி நேரம் காத்திருந்த தியாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்.
Updated on
1 min read

திருவண்ணாமலையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தியாகிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை 2 மணி நேரம் காக்கவைத்து கவுரப்படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கரோனா தொற்று பரவல் தடுப்பு கட்டுப்பாடு காரணமாக, தமிழகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் விடுதலைப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை கவுரவிக்கும் வழிமுறை, இந்தாண்டு கைவிடப்பட்டது.

இதனால், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தியாகிகள் மற்றும் அவர்களது உறவினர்களை, வருவாய்த் துறையின் உயர் அதிகாரிகள் நேரில் சென்று கவுரவித்தனர்.

இந்த நிலையில், அழைப்பு கொடுக்கப்பட்டதாகக் கூறி திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சுமார் 10-க்கும் மேற்பட்ட தியாகிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பங்கேற்றனர்.

திருவண்ணாமலை நகரம் மற்றும் போளூர் பகுதியில் இருந்து வருகை தந்திருந்தனர். தேசியக் கொடியை ஏற்றிய பிறகு, காவல்துறையினரின் மரியாதையை ஏற்றுக் கொண்டதும், தங்களைக் கவுரவிக்க ஆட்சியர் பா.முருகேஷ் வருகை தருவார் என்ற நம்பிக்கையில் காத்திருந்தனர்.

ஆனால், தேசியக் கொடியை ஏற்றி வைத்ததும், காவல்துறையின் மரியாதையை ஏற்றுக் கொண்ட ஆட்சியர் பா.முருகேஷ், புறா மற்றும் வண்ண பலூன்களை பறக்கவிட்டார்.

அதன்பிறகு, நலத்திட்ட உதவிகள் மற்றும் 710 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் பணியில் ஈடுபட்டார். இதனால், தியாகிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சிலர், புறப்பட்டு சென்றனர். 5 பேர் மட்டும் காத்திருந்தனர். அவர்களில் 3 பேர் 75 வயதை கடந்த முதியவர்கள். அவர்களால், ஓரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருக்க முடியாமல் அவதிப்பட்டனர். அவர்களை அழைத்து வந்தவர்களும் யாரிடம் முறையிடுவது என தெரியாமல் பரிதவித்தனர்.

அப்போது அங்கு வந்த வருவாய் துறை ஊழியர் ஒருவரிடம், தாங்கள் நீண்ட நேரமாக காத்திருப்பதாக தெரிவித்தனர். அவர் உடனடியாக சென்று கோட்டாட்சியர் வெற்றிவேலிடம் தகவல் தெரிவித்தார். பின்னர் அவர், கூடுதல் ஆட்சியர் பிரதாப் மூலமாக ஆட்சியரின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர். இதற்கிடையில், பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் முடிவுக்கு வந்தது.

அதன்பின்னர் வந்த ஆட்சியர் பா.முருகேஷ், 2 மணி நேரமாக காத்திருந்த 5 பேருக்கும், 11 மணியளவில் சால்வை அணிவித்து கவுரவித்தார். இதையடுத்து அவர்கள் அனைவரும் புறப்பட்டு சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in