Last Updated : 15 Aug, 2021 04:13 PM

 

Published : 15 Aug 2021 04:13 PM
Last Updated : 15 Aug 2021 04:13 PM

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

வேலூர்:

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 75-வது சுதந்திர தின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வந்த ஆட்சித்தலைவர்கள் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

நாட்டின் 75-வது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் கோலாகலமாக இன்று கொண்டாடப்பட்டது. சுதந்திர தினத்தை யொட்டி வேலூர் மாவட்டத்தில் கோட்டை கொத்தளத்தில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் இன்று காலை 9 மணியளவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதைதொடர்ந்து, கோட்டை நுழைவு வாயிலில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதைதொடர்ந்து, வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பிறகு, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.

இதைதொடர்ந்து, வேலூர் மாவட்ட காவல் சரகத்தில் காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நற்சான்றுகள் மற்றும் கேடயங்களை வழங்கி கவுரவித்தார். அதன்பிறகு, பல்வேறு துறைகள் சார்பில் 1 கோடியே 44 லட்சத்து 23 ஆயிரத்து 476 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு ஆட்சியர் வழங்கினார்.

நிகழ்ச்சியில், கரோனா பேரிடர் காலத்தில் பல்வேறு துகைள் சார்பில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்கள் மற்றும் கேடயம் பரிசாக வழங்கப்பட்டது. முன்னதாக சுதந்திரப்போராட்ட தியாகிகளை கவுரவிக்கும் வகையில் அவர்கள் வசிக்கும் இல்லத்துக்கு அரசு அலுவலர்கள் நேரில் சென்று தியாகிளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில், வேலூர் சரக டிஐஜி ஏ.ஜி.பாபு, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து, வேலூர் சிஎம்சி மருத்துவமனை அருகேயுள்ள காமராஜர் உருவச்சிலை, வேலூர் வடக்கு காவல் நிலையத்துக்கு அருகாமையில் உள்ள டாக்டர்.அம்பேத்கர் உருவச்சிலைக்கும், வேலூர் அரசு முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் அருகில் உள்ள சத்தியமூர்த்தி உருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

வழக்கமாக சுதந்திர தினவிழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு கரோனா தாக்கம் காரணமாக பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நேற்று நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை நகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 75-வது சுதந்திர தின விழா இன்று காலை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமை வகித்து தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். இவ்விழாவில் ராணிப்பேட்டை அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் சிறப்பு சிகிச்சை வார்டுகளில் பணியாற்றிய 10 தூய்மைப்பணியாளர்கள், 5 மருத்துவர்கள், 108 வாகன பணியாளர்கள், காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 25 காவலர்கள், 21 வருவாய் துறையினர், மகளிர் திட்டத்துறை அலுவலர்களின் பணியை பாராட்டி அவர்களுக்கு நற்சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை ஆட்சியர் வழங்கினார்.

இதையடுத்து, பல்வேறு துறைகளின் சார்பில் 62பயனாளிகளுக்கு 38 லட்சத்து 31 ஆயிரத்து 88 ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

முன்னதாக சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவிக்கும் வகையில் அவர்கள் இல்லத்துக்கு நேரில் சென்ற அரசு அதிகாரிகள் தியாகிகளுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில், ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக்சேகர்சஞ்சய், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், திட்ட இயக்குநர் லோகநாயகி, மகளிர் திட்டம், திட்ட இயக்குநர் ஜெயராமன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் இளவரசி, துணை ஆட்சியர்கள் சேகர், சத்தியபிரசாத், தாரகேஷ்வரி, தாட்கோ மேலாளர் பிரேமா, வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஒன்றியம், பாச்சல் ஊராட்சியில் உள்ள ஆயுதப்படை காவலர் பயிற்சி மைதானத்தில் 75-வது சுதந்திர தினவிழா இன்று காலை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா தலைமை வகித்து தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதைதொடர்ந்து, காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.

இதைதொடர்ந்து, பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 98 பயனாளிகளுக்கு 1 கோடியை 19 லட்சத்து 56 ஆயிரத்து 827 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் அமர்குஷ்வாஹா வழங்கினார். இதையடுத்து, கரோனா நோய் தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்கள், சித்த மருத்துவர்கள், வருவாய் துறையினர், காவல் துறையினர்களுக்கு நற்சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகளை மாவட்ட ஆட்சியர் வழங்கி கவுரவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி, சார் ஆட்சியர் அலர்மேல்மங்கை, மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யாபாண்டியன், திட்ட இயக்குநர் செல்வராசு, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)வில்சன்ராஜசேகர், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நல்லதம்பி (திருப்பத்தூர்), தேவராஜி (ஜோலார்பேட்டை), அ.செ.வில்வநாதன்(ஆம்பூர்), வருவாய் துறையினர், காவல் துறையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x