Published : 15 Aug 2021 12:33 PM
Last Updated : 15 Aug 2021 12:33 PM

சசிகலாவை வாழ்த்தி கோவில்பட்டியில் அதிமுக சார்பில் போஸ்டர்கள்

கோவில்பட்டி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சசிகலாவின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் என ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட கோவில்பட்டி தொகுதி அதிமுக சார்பில் கூசாலிபட்டியில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை கட்சியை விட்டு நீக்க கையெழுத்து நடத்த தீர்மானம் நிறைவேற்றினர். இது அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது ஆக.18-ல் பிறந்தநாள் காணும் சசிகலாவுக்கு வாழ்த்து தெரிவித்து கோவில்பட்டி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இதில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அஇஅதிமுக சார்பில் மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் ரூபம் வேலவன், தலைமை பேச்சாளர் ராமசாமி, மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணைச் செயலாளர் ஆறுமுகப்பாண்டி, ஒன்றிய மாணவரணி செயலாளர் செண்பகராமன், இளைஞர் பாசறை நகரச் செயலாளர் பாலாஜி, சிறுபான்மை பிரிவு நகர செயலாளர் அல்லா பிச்சை, கிளை செயலாளர்கள் ராஜமார்த்தாண்டன், சுரேஷ்குமார், ரவிச்சந்திரன், விவசாய அணி செயலாளர் நடராஜன், இலக்கிய அணி செயலாளர் முத்துராஜ் ஆகியோர் கோவில்பட்டி, கயத்தாறு, கடம்பூர், கழுகுமலை உள்ளிட்ட பகுதிகளில் போஸ்டர் ஒட்டி உள்ளனர்.

போஸ்டரில், திராவிட இயக்கத்தின் ஐந்தாவது அத்தியாயமே அஇஅதிமுகவின் மூன்றாவது தலைமுறையே ஆக.18 இல் பிறந்தநாள் காணும் கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளர்.

என குறிப்பிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கோவில்பட்டி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் என வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

அதிமுக சார்பில் சசிகலாவை வாழ்த்தி ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x