சென்னையில் ஒரே வாரத்தில் 24 பேர் குண்டர் சட்டத்தில் கைது; சிறையில் அடைப்பு

சென்னையில் ஒரே வாரத்தில் 24 பேர் குண்டர் சட்டத்தில் கைது; சிறையில் அடைப்பு
Updated on
1 min read

சென்னையில் ஒரு வாரத்தில் 24 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னை பெருநகரில், குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும், பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குற்றவாளிகளின் தொடர்ச்சியான நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள், கொலை, கொலை முயற்சி குற்றங்களில் ஈடுபடுபவர்கள், திருட்டு, செயின் பறிப்பு, சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், போதைப் பொருட்கள் கடத்துபவர்கள், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு மிரட்டி, பணம் பறிப்பவர்கள், நில அபகரிப்பு, ஆபாச வீடியோ தயாரிப்பு, மணல் கடத்தல், உணவு பொருட்கள் கடத்தல், போக்சோ மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள், கரோனா நோய் பாதிப்பில் உயிர் காக்கும் மருந்துகளை பதுக்கி விற்பவர்கள் ஆகியோரைத் தீவிரமாகக் கண்காணித்து குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த 07.08.2021 முதல் 13.08.2021 வரையிலான ஒரு வாரத்தில் பல்வேறு குற்றங்களை மேற்கொண்ட 24 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல 2021 ஆம் ஆண்டு இதுவரையில் தொடர்ச்சியாக பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 235 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in