Published : 14 Aug 2021 03:19 AM
Last Updated : 14 Aug 2021 03:19 AM

நீர்வழிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ரூ.2,371 கோடியில் புதிய திட்டம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னையில் நீர்வழிகளில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க ரூ.2,371கோடி செலவில் புதிய திட்டம்செயல்படுத்தப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:

சென்னையில் ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் இணைப்பு அளிக்கப்பட்டு, சுத்தமான மற்றும்பசுமையான சென்னைக்கு முக்கியத்துவம் அளித்து சிங்கார சென்னை 2.0 தொடங்கப்படும். சென்னை நகரில் 3 இடங்களில், அதாவது கணேசபுரம் சுரங்கப்பாதையின் மேல், கொன்னூர் நெடுஞ்சாலை - ஸ்ட்ராண்ஸ் சாலைமற்றும் தெற்கு உஸ்மான் சாலையில் ரூ.335 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலங்கள் கட்டப்படும். இதற்கென ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பாதாள சாக்கடை திட்டம்

சென்னை நகரத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் மொத்தம் ரூ.2,056 கோடி செலவில் பாதாள சாக்கடைத் திட்டம் ஏற்படுத்தப்படும். சென்னையில் உள்ள நீர்வழிகளில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கும் திட்டம் மொத்தம் ரூ.2,371 கோடி செலவில் தீவிரமாக செயல்படுத்தப்படும்.

ஆந்திராவில் இருந்து குழாய் வழியாக கிருஷ்ணா நீரை சென்னை நீர்த் தேக்கங்களுக்கு கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும். சென்னை நகரக் கூட்டாண்மைத் திட்டம், உலக வங்கி மற்றும் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் நிதியுதவியுடன் விரைவில் தொடங்கப்படும்.

பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள், வெள்ள நீர் வடிகால்கள், சாலைகள், கட்டிடங்கள் போன்ற பொதுச் சொத்துகளை கட்டமைத்தல் மற்றும் பராமரித்தல் ஆகிய பணிகளிலும் நீர்நிலைகளைப் புதுப்பித்தல் போன்றவற்றிலும் நகர்ப்புற ஏழைகளை ஈடுபடுத்துவதன் மூலம் பயன்தரும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தக் கூடிய ஒரு முன்னோடி திட்டமாக இந்த அரசு ஒரு நகர்ப்புற ஊதிய வேலைவாய்ப்புத் திட்டத்தை ஏற்படுத்தும். இதற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x